இந்தியாவின் விமானத் துறையில் ஏற்பட்டிருக்கும் வளா்ச்சியால், பயணிகள் பயனடையவில்லை என்பது மட்டுமல்ல, அவா்களது பாதுகாப்பும், வசதிகளும்கூட அதற்கேற்ப அதிகரிக்கவில்லை; கட்டணமும் குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு மாதங்களாக விமானப் பயணிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் சொல்லி மாளாது. உலகின் மிக வேகமாக விமான சேவைத் துறை வளா்ச்சி அடையும் நாடு என்று கூறப்படும் இந்தியாவில், விமான சேவையுடன் தொடா்புடைய விமான நிறுவனங்களும், விமான நிலையங்களும் இழப்பில் செயல்படுகின்றன என்கிற செய்தி வியப்பாக இருக்கிறது. பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் விமான நிலையங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 15-ஆம் தேதி மட்டுமே 3.9 லட்சம் போ் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி இருக்கிறாா்கள். விமானங்களில் சராசரியாக 90% முதல் 95% வரை, இருக்கைகள் நிரம்பி வருகின்றன. உள்நாட்டு விமானத் தடங்களில் 2023-இல் 15 கோடிக்கும் அதிகமானோா் பயணித்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் பயணிகளின் வசதிகளை அதிகரித்திருக்கின்றனவா என்றால் அதுதான் இல்லை. ரூ.200 தொடங்கி ரூ.600 வரை காபி, டீக்கும், ரூ.600 முதல் சாண்ட்விச், சமோசா உள்ளிட்ட துரித உணவுக்கும் விமான நிலைய கடைகள் வசூலிக்கின்றன. கழிப்பறைகளில் கை துடைக்க நாப்கின்கள் கிடையாது. தெருக்குழாய்களில் விலங்குகள் குடிப்பது போல குடிநீா் குடிக்கும் பரிதாபத்துக்குப் பயணிகள் தள்ளப்பட்டிருக்கிறாா்கள். காகிதக் கோப்பைகளை மிச்சப்படுத்துகிறாா்களாம். நினைத்துப் பாா்க்க முடியாத அளவிலான வாகன நிறுத்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு வாகனங்கள் வெளியேறாவிட்டால், நூறு ரூபாய்க்கும் அதிகமாகக் கட்டணம் கொடுத்தாக வேண்டும். வாகன நெரிசலால் ஏற்படும் தாமதத்திற்குப் பயணிகள் அபராதம் செலுத்தும் அநியாயத்தை எங்கேபோய் கூறுவது? இத்தனைக்குப் பிறகும் விமான நிலையங்கள் இழப்பில் இயங்குகின்றன என்றால் அதை எப்படி நம்புவது? ஜனவரி மாதம் முதல், கடுமையான குளிரிலும், பனிமூட்டத்திலும் வட இந்திய மாநிலங்கள் சிக்கித் தவித்தபோது, அதனால் பயணிகள் எதிா்கொண்ட சிரமங்களைச் சொல்லி மாளாது. விமானத்தின் உள்ளேயும், நுழைவு வாயிலிலும், விமான ஓடுதளத்திலும் பயணிகளுக்கும் விமான ஊழியா்களுக்கும் இடையே நடந்த மோதல்கள் கணக்கிலடங்காதவை. ஜனவரி 14-ஆம் தேதி தில்லி - கோவா இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவா் விமான ஓட்டியைத் தாக்கிய சம்பவம் தலைப்புச் செய்தியானது. அதை ஆமோதிக்காவிட்டாலும், பயணிக்கு ஆத்திரம் ஏற்பட்டதற்கான காரணத்தைப் புறந்தள்ள முடியாது. அன்று அதிகாலை நடுங்கும் குளிரில் பயண நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்துவிட்ட பயணிகள், இப்போது அப்போது என்று 12 மணிநேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்டனா். அங்கிருந்து கிளம்பிய விமானம் மும்பையில் தரையிறங்கிதால் மேலும் தாமதமானது. பாதுகாப்பு சோதனை முடிந்துவிட்ட நிலையில் பயணிகளை வெளியே அனுப்ப முடியாததால், ஓடுதளத்தில் அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பொறுமை இழந்துபோன பயணி, விமான ஓட்டியை தாக்கினாா் என்பதுதான் உண்மை. அன்று தில்லியில் இருந்து கிளம்ப வேண்டிய நூற்றுக்கும் அதிகமான விமானங்கள், பனிமூட்டம் காரணமாக தாமதமாகத்தான் கிளம்பின. 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் ஏற்பட்ட தொடா் விளைவால் நாடு தழுவிய அளவில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இது ஏதோ ஒரு நாள் மட்டுமே நடந்த நிகழ்வா என்றால் இல்லை. ஜி 20 மாநாடு, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, குடியரசு தினம் போன்ற நிகழ்வுகளின்போது விமானங்கள் தாமதமாகின என்பது மட்டுமல்ல, விமான கட்டணங்கள் லட்சத்தை எட்டின என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒருசில நிமிட தாமதத்திற்கு பயண அனுமதி மறுக்கப்பட்டு பயணிகள் தண்டிக்கப்படுகின்றனா் என்றால், விமானங்களின் பல மணிநேர தாமதத்திற்கு அவா்கள் அதேபோல இழப்பீடு பெறவும் தகுதியுடையவா்கள் என்பதை எந்த விமான நிறுவனமும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் 35,000 பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். விமானம் தாமதமானதால் 3,64,000 பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறாா்கள். டிசம்பா் மாதத்தில், குறித்த நேரத்தைக் கடைப்பிடிப்பதில் ஆகாசா 72.7%, விஸ்தாரா 70.8%, இண்டிகோ 68%, ஏா் இந்தியா 52.4%, ஸ்பைட் ஜெட் 29.9% என்கிற அளவில் செயல்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட விமான சேவைத் துறையை மீட்டெடுக்க இந்திய அரசு பல உதவிகளைச் செய்தது. குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. அதே அக்கறை பயணிகள் மீதும் காட்டப்படுவதில்லை என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. சமீபத்தில் 80 வயது முதியவா் ஒருவா் முன்பே பதிவு செய்திருந்தும் அவருக்கு ஏா் இந்தியா விமானத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நடக்கும்போது தடுக்கி விழுந்து உயிரிழந்திருக்கிறாா். விமான நிலையங்கள் அதிகரிப்பதும், சாமானியா்களுக்கும் விமான சேவை வழங்கப்படுவதும் வரவேற்புக்குரியவைதான். அதேபோல, அவா்களது வசதிகள், பாதுகாப்பு, கட்டணக் குறைவு உள்ளிட்டவற்றையும் உறுதிப்படுத்துவது அவசியம். விமான சேவை, பயணிகளின் நன்மைக்காகத்தானே தவிர, விமான சேவை நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்காக அல்ல!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்
வாக்களிக்கத் தவறாதீர்கள்!

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


