முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய இந்திரா காந்தி அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்ட ஒரு யோசனை இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. வழக்கமாக ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கும் மத்திய அரசின் நிதியாண்டை மாற்றலாமா என்பதுதான் அந்த யோசனை. நரேந்திர மோடி அரசு, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையிலான குழுவை அமைத்து, இது குறித்துப் பரிசீலனை செய்து, புதிய நிதியாண்டு முறையைப் பின்பற்றுவது சரியாகுமா, சாத்தியப்படுமா என்பதைப் பரிசீலித்து அறிக்கை அளிக்கப் பணித்துள்ளது.