நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஆயத்தமாகிறோம்!

மத்திய அரசு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடியை ஒதுக்கி ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. எப்போதோ செய்திருக்க வேண்டிய இந்த முயற்சியை ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது விழித்துக்கொண்டு இந்திய அரசு செய்யத் துணிந்திருக்கிறதே என்பது மிகப்பெரிய ஆறுதல்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

ஆசிரியர்

மத்திய அரசு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடியை ஒதுக்கி ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. எப்போதோ செய்திருக்க வேண்டிய இந்த முயற்சியை ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது விழித்துக்கொண்டு இந்திய அரசு செய்யத் துணிந்திருக்கிறதே என்பது மிகப்பெரிய ஆறுதல்.

அரசின் இந்தத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுமானால், ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுமார் 11 பில்லியன் டாலர் (ரூ.71,500 கோடி) முதலீடு கிடைக்கக்கூடும். ஏற்றுமதி மூலம் ஏறத்தாழ 30 பில்லியன் டாலர் (ரூ.1,95,000 கோடி)

இந்தியா பெறக்கூடும். மேலே குறிப்பிட்ட இலக்குகளை எட்ட முடியுமா முடியாதா என்பது இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது, இதை ஜவுளித் துறையினரும், ஆயத்த ஆடை தயாரிப்பாளர்களும் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இந்திய அரசு நெசவுக்குப் போதிய முக்கியத்துவமோ முன்னுரிமையோ அளிக்காமல் இருந்து வந்தது என்பதுதான் சோகமான உண்மை. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிக அதிகமானவர்களின் வாழ்வாதாரமாக இன்றைக்கும் நெசவுத் தொழில்தான் இருந்து வருகிறது என்கிற உண்மை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களில் பலரும், போதுமான வருவாய் இல்லாமல் வறுமையில் உழல்வதும், தங்களுக்குத் தெரிந்த நெசவுத் தொழிலை விட்டுவிட்டு கட்டடக் கூலித் தொழிலாளர்களாக மாறி வருவதும் நிதர்சன உண்மை.

இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசு விழித்துக்கொண்டு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடியை ஒதுக்கிப் பல சலுகைகளை அறிவித்திருக்

கிறது. இந்த சலுகைகளால் கைத்தறி நெசவாளர்கள் நேரடியாக பயன்பெற மாட்டார்கள் என்றாலும், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு விசைத்தறிகளிலும் ஆயத்த ஆடைத் தயாரிப்பிலும் வேலைவாய்ப்பு உருவாவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பை வழங்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 கோடியில் 5,500 கோடி, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையை 5% அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் மாநில அரசுகளுக்குச் செலுத்தும் வரிகளை, இதன் மூலம் மத்திய அரசு அவர்களுக்குத் திருப்பித் தருகிறது. இது அவர்களது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

மீதமுள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் தங்களது இயந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதற்காக தரப்படும் மானியம். தற்போது தரப்படும் 15% மானியம் இனிமேல் 25%-ஆக உயர்த்தப்படுகிறது. இது வேலைவாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.

நமது தவறான கொள்கைகளால், ஒரு தலைமுறை நெசவாளர்களின் வாழ்க்கையையும், ஜவுளித் துறையின் வளர்ச்சியையும் நாம் பாழ்படுத்தி விட்டோம். கைத்தறி நெசவுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தி அதன் ஏற்றுமதியை அதிகரிப்பதும், ஜவுளித் துறை, ஆயத்த ஆடைத் துறையின் வளர்ச்சியும் வேறுவேறு என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம். கைத்தறியை நாம் சிறு தொழிலாகவே வைத்திருக்க முற்பட்டதால், ஆயத்த ஆடைத் துறையும் அந்த அளவிலேயே நின்று விட்டது.

இந்தக் காலகட்டத்தில், சீனா, வியத்நாம், வங்க தேசம் போன்ற நாடுகள் கைத்தறியை விசைத்தறியாக்கி, அதையே பெரிய அளவில் உலகளாவிய தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டன. இந்தியா கைத்தறி பாதித்துவிடக் கூடாது என்கிற ஒரே கண்ணோட்டத்துடன், அந்தத் துறையின் வளர்ச்சியை சட்டம், விதிகள் என்று முடக்கிப் போட்டுவிட்டது.

2005-ஆம் ஆண்டில்தான், பல விதிகள், ஒதுக்கீடுகள் தளர்த்தப்பட்டன. ஆயினும், உலக வர்த்தகத்தின் பயனை அடையும் நிலையில் நாம் இல்லை. உலக ஆயத்த ஆடைத் துறையில் இந்தியாவின் பங்கு வெறும் 3.1% மட்டுமே. நம்மைவிட 35% அதிகமாக சீனாவும், 60% அதிகமாக வங்க தேசமும் சர்வதேச ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன.

இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் சலுகைகளால், இந்தியா இழந்த பல வாய்ப்புகளைப் பெற முடியும். இதற்கு முன்னால் ஜப்பானும், கொரியாவும்போல, இப்போது அதிகரித்துவிட்ட தொழிலாளர் ஊதியத்தாலும், வேறு துறைகளில் அக்கறை காட்டுவதாலும் சீனாவில் ஆயத்த ஆடைகள் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழல், வியத்நாமையும், வங்க தேசத்தையும் போல இந்தியாவுக்கும் அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டமைப்புச் சந்தையைக் குறிவைத்து சர்வதேச ஏற்றுமதியை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

அரசின் அறிவிப்பில் இன்னொரு முக்கியமான அம்சம், தொழிலாளர் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள். எட்டு மணி நேர வேலை, குறிப்பிட்ட கால வேலைக்கும் நிரந்தரப் பணியாளருக்கான சலுகைகள், ஊழியர் வைப்பு நிதியில் விலக்கு என்று பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அரசின் முயற்சி வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், விரைவாக, மிக விரைவாக, நாம் நமது துறைமுகங்கள், சாலைகள், எரிசக்தி போன்ற அடிப்படை வசதிகளை சர்வதேசத் தரத்திற்கும், நமது தேவைக்கும் ஏற்றவாறு முறைப்படுத்தாமல் போனால், சலுகைகளும், அறிவிப்புகளும் செய்தும் பலனிருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.