பயங்கரவாதம் என்று மட்டுமன்றி, சாதாரணமாக ஊராட்சித் தலைவரைக் கொல்லவும்கூட பைப் வெடிகுண்டு வைக்கும் போக்கும், மதுரையில் நடந்ததுபோல, நெருக்கடி தரும் காவல் துறையை அச்சுறுத்தும் விதமாகவும்கூட வெடிகுண்டுகள் வைத்து மிரட்டுவதும் சர்வசாதாரணமாகிவிட்ட இன்றைய சூழலில், வேதிப்பொருள் விற்பனை முழுவதும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட வேண்டும். கூட்டுப்பொருள் அல்லது கலவை மூலம் வெடி மருந்து தயாரிக்க முடியுமானால், அத்தகைய ரசாயனங்கள் அனைத்தும் பயங்கரவாதிகளால் மட்டுமல்ல, தனிநபர் பகைமைக்கும்கூட பழிவாங்கப் பயன்படுத்தப்படும். ஆகவே அமிலம், வேதிப்பொருள் அனைத்திலும் அதன் விற்பனை, வணிகம் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.