டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தன்னெஞ்சறிவது பொய்யற்க...

பொதுத் தேர்தல் வரும்போதெல்லாம், அரசு உயர் அதிகாரிகளில் சிலர் பதவி விலகுவதும், ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் வழக்கமாகி விட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:43 am

ஆசிரியர்

பொதுத் தேர்தல் வரும்போதெல்லாம், அரசு உயர் அதிகாரிகளில் சிலர் பதவி விலகுவதும், ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் வழக்கமாகி விட்டது. நடைபெற இருக்கும் 16ஆவது மக்களவைக்கான தேர்தலில் போட்டியிடக் களமிறங்க இருக்கும் முன்னாள் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

"ரா' புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர், இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி, முன்னாள் மாநிலத் தலைமைச் செயலர் என்று பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். மும்பை மாநகர முன்னாள் தலைமை காவல் ஆணையர் பா.ஜ.க.வில் சேர்ந்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடத் தயாரா

கிறார். ஏதாவது ஒரு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிந்தால், பதவி விலகி அந்தக் கட்சியில் சேர்ந்து போட்டியிடத் தயாராகும் அதிகாரிகளின் எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று அரசு அதிகாரிகளாக இருந்து அரசியல்வாதிகளானவர்களின் பட்டியல் மிக மிக நீளம். யஷ்வந்த் சின்ஹா, மீரா குமார், அஜித் ஜோகி, பி.எல். புனியா, கே.ஜே. அல்போன்ஸ், பவன் வர்மா, அப்துல் காலிக், கோப்புல ராஜு, கே.ஆர். நாராயணன், மணிசங்கர் அய்யர், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி, கர்நாடக முன்னாள் ஆளுநர் டி.என்.சதுர்வேதி, ஜம்மு}காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் உள்ளிட்ட பலர் அரசுப் பதவி வகித்தவர்கள்தான்.

நிர்வாகத்தில் அதிகாரிகளாக உயர் பதவி வகிப்பவர்கள், ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றுவதையோ, தேர்தலில் போட்டியிடுவதையோ புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட அவர்கள் முற்படும்போதுதான், அவர்களது முடிவை தார்மிக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆளும் கட்சி சார்பாக அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், அதுவரை அவர்கள் எடுத்த நிர்வாக முடிவுகளை நாம் சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பதவி விலகி ஆட்சி யிலிருந்து அகன்ற கட்சியின் சார்பில் போட்டியிடும்போதும், அதேபோல முந்தைய ஆட்சியில் அவர்களது செயல்பாடுகளையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

அறிவுஜீவிகளையும், நிர்வாகத் திறமையுடையவர்களையும், துறை சார்ந்த நிபுணர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மேலவை மற்றும் மாநிலங்களவைக்கு அரசியல் சட்டம் வழி வகுத்

திருக்கிறது. ஆளும் கட்சி தனக்குத் தேவைப்படும் அரசியல்வாதிகளல்லாத, தேர்தலில் போட்டியிட விரும்பாத திறமைசாலிகளை மேலவைக்கோ, மாநிலங்களவைக்கோ தேர்ந்தெடுத்து அமைச்சரவையில் இடமளிக்கலாம். பண்டித ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் சி.டி. தேஷ்முக்கும், நரசிம்மராவின் ஆட்சியில் மன்மோகன் சிங்கும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியமைச்சராக்கப்பட்டவர்கள்தான்.

தங்களுக்கு நெருக்கமாக இருக்கும், இருந்த அரசு உயர் அதிகாரிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில், எந்தவொரு கட்சியும் விதிவிலக்காக இல்லை. இதற்கு அதிகாரிகளின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணமல்ல. ஆட்சியில் இருந்தபோது அவர்களுக்கு அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கமும் காரணம்.

ஆட்சியில் அமரும் அரசியல் தலைமை எடுக்கும் கொள்கை முடிவுகளை நிர்வாக ரீதியாக செயல்படுத்துவதுதான் அதிகார வர்க்கத்தின் கடமை. அப்படிப்பட்ட அதிகார வர்க்கம் அரசியல் சார்புடையதாக இருப்பது நல்லதல்ல. அரசியல் சார்புடையதாக அதிகார வர்க்கம் மாறி இருப்பதால்தான், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் அதிரடி அதிகாரிகள் மாற்றம் நிகழ்கிறது.

சுயலாபத்துக்காக அதிகார வர்க்கம் அரசியல் முலாம் பூசிக் கொள்வதும், அரசியல் கட்சிகள் அதிகார வர்க்கத்தைக் கட்சிக்காரர்களாக மாற்ற முற்படுவதும் வரவேற்புக்குரிய செயல்பாடுகள் அல்ல. ஜனநாயகத்துக்கு ஏற்புடையதும் அல்ல.

அரசு உயர் அதிகாரிகள் பதவி விலகினாலோ, ஓய்வு பெற்றாலோ அடுத்த ஓர் ஆண்டுக்கு ஊதியம் பெறும் வேறு வேலையில் சேரக்கூடாது என்று விதிமுறை இருக்கிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிற தடையில்லை. வாக்காளர் என்கிற முறையில் இது அரசியல் சட்டப்பிரிவு 14இல் தரப்பட்டுள்ள அவர்களது தனிமனித சுதந்திரம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் விளக்கம் கூறியிருக்கிறது.

பதவி விலகி அரசியல் கட்சியில் சேர்வதும், தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சராவதும், பதவி ஓய்வு பெற்றதும் ஆளுநராக நியமிக்கப்படுவதும் சட்டப்படி சரியாக இருக்கலாம். மனசாட்சிப்படியும், தார்மிக ரீதியாகவும்...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.