பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை மானிய விலையில் அளிப்பதால் அரசுத்துறை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. இந்த வாதத்தை முன்வைத்துதான் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதால் விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை.