டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உக்ரைன் - நிலைக்குமா அமைதி?

உக்ரைன் அதிபர் விக்டோர் யானுகோவிச்சின் கரம் வலுத்திருப்பது போலவும், எதிர்ப்பாளர்களை அவர் அடக்கிவிட்டது போலவும் கடந்த மாதம் இருந்த தோற்றம் மறைந்து, இப்போது அவர் பதவி விலகியது மட்டுமல்ல, அடைக்கலம் தேடி அலைகின்ற நிலையும் ஏற்பட்டு விட்டிருக்கிறது. எல்லாமே துரித கதியில் நடந்தேறின.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:31 am

ஆசிரியர்

உக்ரைன் அதிபர் விக்டோர் யானுகோவிச்சின் கரம் வலுத்திருப்பது போலவும், எதிர்ப்பாளர்களை அவர் அடக்கிவிட்டது போலவும் கடந்த மாதம் இருந்த தோற்றம் மறைந்து, இப்போது அவர் பதவி விலகியது மட்டுமல்ல, அடைக்கலம் தேடி அலைகின்ற நிலையும் ஏற்பட்டு விட்டிருக்கிறது. எல்லாமே துரித கதியில் நடந்தேறின.

கடந்த நவம்பர் மாதம் முதலே உக்ரைன் தலைநகர் கீவ் மட்டுமல்லாமல், ஏனைய பல நகரங்களும் வன்முறைப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டவண்ணம் இருந்தன. ரஷ்யாவுடனான அதிபர் யானுகோவிச்சின் நெருக்கமும் ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகத் தொடர்புக்கு அவர் தயாராக இல்லாமல் இருந்ததும்தான் போராட்டத்திற்கு அடிப்படை. அதிபர் யானுகோவிச் பதவி விலகியாக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தபோது, தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்ள அவர் சில நிபந்தனைகளுக்குச் சம்மதித்தார்.

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசை நிறுவுவது, நாடாளுமன்றத்திற்கு பழையபடி அதிகாரம் வழங்க அரசியல் சட்ட மாற்றங்களைச் செய்வது, விரைவிலேயே தேர்தல் நடத்துவது போன்றவைதான் அந்த சமரசத்தில் முக்கியமான அம்சங்கள். நாடாளுமன்றத்திற்கு அதன் அதிகாரம் முழுமையாகத் தரப்பட்ட மறுநாளே, யானுகோவிச்சுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவர் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுதான் எதிர்பாராத திருப்பம்.

அதிபர் யானுகோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாலும், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்திருப்பதாலும் உக்ரைனில் நிரந்தர அமைதி ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். உள்நாட்டுப் போர் தவிர்க்கப்பட்டிருக்கிறதே தவிர, உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு இது தீர்வாக அமையாது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரெசெசின்ஸ்கி "தி கிராண்ட் செஸ் போர்ட் - அமெரிக்கன் ப்ரைமசி அண்ட் இட்ஸ் ஜியோஸ்ட்ராடெஜிக் இம்பரேடிவ்ஸ்' என்கிற புத்தகத்தில், ""உக்ரைன் இல்லாமல் ரஷ்யா சாம்ராஜ்யமாகாது. மீண்டும் சோவியத் யூனியன் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், உக்ரைன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் நங்கூரமாக்கப்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதைத்தான், ஐரோப்பிய யூனியன் இப்போது செய்து கொண்டிருக்கிறது.

2004-05 இல் நடந்த ஆரஞ்சு புரட்சியின்போது எது பிரச்னையோ அதுவேதான் இப்போதும் பிரச்னை. உக்ரைன் சோவியத் சார்பு நாடாகத் தொடர வேண்டுமா, ஐரோப்பிய யூனியனுடன் நெருங்க வேண்டுமா என்பதுதான் இத்தனை போராட்டங்களுக்கும் அடிப்படை.

உக்ரைனில் எல்லாவித தொழிற்சாலைகளும் கிழக்குப் பகுதியில் இருப்பதால், மேற்குப் பகுதியைச் சேர்ந்த பலர் வேலைக்காக கிழக்குப் பகுதியில் குடியேறி வாழ்கிறார்கள். உக்ரைனின் கிழக்குப் பகுதியைப் பொருத்தவரை இப்போதும் யானுகோவிச்சின் செல்வாக்குதான் அங்கு கொடிகட்டி பறக்கிறது. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தலைவர்களில் பலர், எதிர்க்கட்சியினர் அமைத்திருக்கும் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்போதைய ஆட்சியாளர்களுக்கு இன்னொரு ஆபத்தும் காத்திருக்கிறது. காவல்துறை அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்றாலும், உக்ரைன் நாட்டு ராணுவம் இதுவரை எந்தவித சார்பும் இல்லாமல்தான் தொடர்கிறது. ஒருவேளை ராணுவம் யானுகோவிச்சுக்கு ஆதரவாக திரும்பினால், இப்போதைய ஆட்சி எந்த நிமிடத்திலும் அகற்றப்பட்டுவிட கூடும்.

உக்ரைன் நாட்டுப் பொருளாதாரம் மிகவும் சீரழிந்த நிலையில் இருக்கிறது. உக்ரைனில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றம் மேலைநாடுகளில் விருந்துகளுடன் வரவேற்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், சரிந்துவிட்டிருக்கும் உக்ரைன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் சக்தி ஐரோப்பிய யூனியனுக்கு இல்லை. இந்த நிலையில், எரிவாயு, பெட்ரோல் போன்ற பொருள்களுக்கான விலையை ரஷ்யா உயர்த்தினால், உக்ரைன் தள்ளாடத் தொடங்கும். மீண்டும் போராட்டம் வெடிக்கும். மக்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள்.

மேலைநாடுகளுக்கு இடையேயும்கூட உக்ரைன் பிரச்னையில் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. போலந்தும், ஜெர்மனியும் உக்ரைனுடன் நெருக்கம் பாராட்டுவது பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், எந்த அளவுக்கு உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியனின் பொருளாதார உதவி கிட்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உக்ரைன் பற்றி இந்தியா கவலைப்பட்டாக வேண்டும். உக்ரைனில் ரஷ்ய செல்வாக்கு குறைந்தால், பாகிஸ்தானுடனான நெருக்கம் அதிகரிக்கும் என்பதே வரலாறு. உக்ரைனில் நிரந்தர அமைதி ஏற்படுமா என்பது சந்தேகம்தான். விரைவில் உக்ரைன் பிளவுபடுவதற்கான சாத்தியம்தான் அதிகம் என்று தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.