தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அறிமுகப்படுத்தப்பட இருக்கும், "நோட்டா' எனப்படும் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்கிற பதிவு, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பது. "நோட்டா' மூலம், களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்றால் அதைப் பதிவு செய்யும் உரிமை வாக்காளர்களுக்குத் தரப்படுகிறது. ஆனால், பெருவாரியான வாக்காளர்கள் "நோட்டா'வில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதால் மறுதேர்தல் நடத்துவது என்பது இப்போதைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி சாத்தியமில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.