பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு சமூகத்தில் அனைத்து தரப்பிலும் மிகவும் உக்கிரமாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று உண்டென்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். இப்படி கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாமல் தன்னை நம்பிவந்த ஒரு பெண்ணை சில வக்கிரம் பிடித்த இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தவும், அவர்களை நிர்வாணப்படுத்தி விடியோ எடுக்கவும் முடியுமென்றால் அம்மாதிரியான சூழ்நிலைகளில் பாதிப்புக்கு ஆளான பெண்கள் மட்டும் ஏன் அஞ்சி நடுங்கிக்கொண்டு, கதறி அழுதுகொண்டு இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாதுகாப்புக்காக எச்சூழலிலும் எதிர்த்துப் போராடும் உரிமை கொண்டவர்கள் இல்லையா? தன்னை ஒரு ஆண் மானபங்கப்படுத்த முயற்சிக்கிறான் எனும்போது அப்பெண்ணுக்கு அவனைக் கொலை செய்யவும் சட்டத்தில் உரிமை உண்டு என்று சில பெண்ணுரிமை மற்றும் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்களே. இது நிஜமா? பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிப்பவர்களைக் கொலை செய்தால் அப்பெண்களால் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா? இந்திய தண்டனைச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொலைப்பழியில் இருந்து தப்ப வகையுண்டா? இந்திய தண்டனைச் சட்டத்தின் செக்ஷன் 100 பிரிவு என்ன சொல்கிறது? என்று வழக்கறிஞர் ஒருவரைக் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்தான் இது.