சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்சகட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய "தினமணி"யின் பங்கு, சுதந்திர இந்தியாவில் அதிகரித்தது. மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப்பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக்கொடுக்காமல் "தினமணி" தொடர்கிறது என்றால் அதற்கு, அதன் முன்னோடிகளான சதானந்த், ராம்நாத் கோயங்கா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் போட்டுத் தந்த அடித்தளம் மட்டுமல்ல; தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் "தினமணி" நாளிதழைக் கருதுவதுதான் காரணம்.