இப்போதைய வழக்கு ஹாசினி வழக்கு அல்ல; இது குற்றவாளியின் தந்தை, தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு. இப்படி ஒரு பிரதான வழக்கில் இருந்து பல வழக்குகள் பிரிந்தாலும் கூட, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இதன் மூல வழக்கான சிறுமி கொலை வழக்கு, தமிழ்நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பான அதிர்வுகளைப் பற்றி அறியாதவராக இருக்க முடியாது. இவ்வழக்கின் தன்மையை ஆராயும் போது குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தைக் காட்டிலும் கடுமையான தண்டனை கிடைத்தே ஆக வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இந்த வழக்கை உற்றுக் கவனிப்போர் அனைவருக்குமே இருந்தது. அது நியாயமான எதிர்பார்ப்பும் கூட. என்ன தான் நீதிபதிகள் மாறினாலும், காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டாலும் கூட வழக்கு ஒன்றே. அது அப்பட்டமான படுகொலை வழக்கு. திட்டமிட்டு நிகழ்த்தப் பட்ட குரூரமான வன்முறை என்று நிரூபணம் ஆன பிறகு தான் குண்டர் சட்டத்தில் அவனை சிறையில் அடைத்தார்கள். பிறகு இப்போது, காவல்துறை உரிய பதிலை அளிக்கவில்லை, என உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறி, ஜாமீனில் வெளிவர முடியாத விதிகளைக் கொண்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஏன்? அப்படியானால் ரத்து செய்த நீதிபதிக்கு தஷ்வந்த் செய்த குற்றத்தின் தன்மை தெரியாதா? அல்லது அது மிக, மிக மோசமான வன்கொடுமை என அவர் நம்பவில்லையா? எந்த அடிப்படையில் அவர் குண்டர் சட்டத்தை ரத்து செய்தார்? என்பதற்கு போதிய விளக்கங்களைக் காணோம்.