நேற்று மதியத்தில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை. நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தன்னையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொண்டு, அந்தச் சிறுமி ஊடகங்களில் பேசிய காட்சியே மீண்டும், மீண்டும் மனதைத் துணுக்குறச் செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மையப்பகுதியிலிருக்கும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி, அவளுக்கு வெகு இளமையிலேயே, தன் தாயைப் புற்றுநோயில் பலி கொடுத்ததில் தொடங்கி எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாக இருக்கிறது. மனைவியை இழந்த சோகத்தையும் தாண்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்கும் அவளது அப்பாவின் ஆசை அந்தச் சிறுமியைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த, அவள் தன்னால் முடிந்த அளவுக்கு எல்லா வகுப்புகளிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாகத் தேறி வருகிறாள். அவள் பள்ளியில் கழித்த கடைசி மூன்று ஆண்டுகளில் அவளுள், தானொரு மருத்துவராகியே தீர வேண்டும் என்ற கனவு அகலமாய்க் கிளை பரப்பி வளர்ந்து ஆழமாய் வேரூன்றிக் கொள்கிறது. பிளஸ் டூ தேர்வு முடிவு வெளிவந்த நாளில் அந்தச் சிறுமி, தனக்கான இட ஒதுக்கீட்டின் படி, தானெடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும், கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையிலும் தனக்கு மருத்துவக் கல்வி பயில இடம் கிடைக்கும் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்த போது ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்களால் அந்தக் கனவு தவிடு பொடியாகிறது. இதில் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்...