ஆண்களின் சதவிகிதம் அதிகமிருந்த சட்டமன்றத்தில் மாநில முதல்வராக, முதல்வரிசையில் கவர்ந்திழுக்கும் மையமாக ஜெ இருந்தார். சபை நிகழ்வுகளில் அவரது பேச்சு பல சமயங்களில் ரசிக்கும் படியிருக்கும். எதிர்கட்சியினரை உசுப்பேற்றும் படி இருக்கும், சில சமயங்களில் நான் ஆணையிட்டேன், எனது ஆட்சி, எனது தலைமையிலான அரசு, என்று அவரது பேச்சு மக்களைச் சோதித்தாலும் மக்கள் ஜெ வை விரும்பினார்கள் என்பதற்கு அவரது அரசியல் வெற்றிகளே சான்று. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் எந்தக் கேள்விகளுக்கும் தங்கு தடையின்றி பதில் அளிக்கக் கூடிய, செய்தியாளர்களிடமும், ஆங்கில ஊடகவியலாளர்களிடம் தமிழை விடவும் அதிக லகுத் தன்மையுடன் ஆங்கிலத்தில் உரையாடக் கூடிய, அதிமுக தொண்டர்களைக் கண்டதும் முகமும், அகமும் மலர்ந்த சிரிப்புடன் இரு விரல் உயர்த்தி இரட்டை இலைச் சின்னம் காட்டும் ஜெ இனி எப்போதுமில்லை. ஆனால் அவரது நேர்காணல்களும், உரையாடல்களும் இணையமெங்கிலும் இறைந்து கிடக்கின்றன. அவற்றில் சில இதோ...