போட்டிக்காக இதுவரை வந்து குவிந்திருக்கும் சுற்றுலா அனுபவக் கடிதங்களில் சிறந்த மூன்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை... ஏனெனில், ஒவ்வொரு வாசகரது சுற்றுலா அனுபவமும் அதை வாசிக்கக் கூடிய எவருக்கும் சுவாரஸ்யம் தரக்கூடியதாக மட்டுமன்றி, நாமும் இங்கெல்லாம் சுற்றுலா சென்றால் என்ன? முதலில் உள்ளூர்... உள்நாடு... அண்டை நாடு பிறகு உலகத்திலுள்ள அத்தனை இடங்களையும் வருடம் தோறும் முறை வைத்துச் சுற்றி வந்தால் என்ன? சும்மா கிணற்றுத் தவளைகளாக எத்தனை நாட்களுக்குத்தான் சொந்த ஊரிலேயே உட்கார்ந்து கொண்டு பார்த்த இடங்களையும் பார்த்த முகங்களையுமே பார்த்துக் கொண்டு இருப்பது?! வாழ்க்கையில் எதையாவது புதிதாக தரிசிக்கும் போது கிடைக்கக் கூடிய பேரானந்த உணர்வை நாமும் அடைய வேண்டாமா? அதற்காக எல்லோருமே லண்டனும், பாரீஸும் போக வேண்டுமென்பதில்லை. வாய்ப்பிருக்கும் போது அங்கும் போய்க் கொள்ள வேண்டியது தான். அதற்குள் உள்ளூரிலும், உள்நாட்டிலுமாக கொட்டிக் கிடக்கும் இயற்கை எழிலை, தொன்மை வாய்ந்த சரித்திர ஆவணங்களை, வெவ்வேறு மனிதர்களை அவர் தம் முகங்களை, குணநலன்களை, வாழ்க்கைமுறைகளை கண்டு களிப்பதில் ஏன் சோர்வு கொள்ள வேண்டும்?! என்ற உணர்வைத் தட்டி எழுப்புவனவாக அமைந்துள்ளன எங்களுக்கு வந்துள்ள சுற்றுலா அனுபவங்கள் அனைத்துமே!