நான் சிறுவனாக இருந்தபோதே, என் மாமா சொல்வார்! "டேய்! ஒலகம் பரந்து விரிஞ்சி கெடக்குடா! சும்மா தஞ்சாவூர்ல அல்லது திருச்சியில படிச்சோம்! அதுக்குள்ளயே வேலை செஞ்சோம்! கடலைப் பார்க்க நாகப்பட்டிணம் போனோமுன்னு வாழ்க்கையை முடிச்சுக்கிடாதீங்கடா! கடல் கடந்து போங்க!பல எடத்தையும் ஊரையும் பாருங்க! 'திரை கடலோடித் திரவியம் தேடணும்னு பெரியவங்க சொன்னதை ஞாபகத்தில வெச்சுக்குங்க!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்! அவர் வார்த்தைகள் மனதில் பசு மரத்தாணியாகப் பதிந்துவிட்டன! மனித வாழ்வில் சுற்றுலா எவ்வளவு அவசியமென்பது அந்த வயதில் சரியாக விளங்காவிட்டாலும்,அதன் முக்கியத்துவத்தை இப்பொழுது நன்றாகவே உணர முடிகிறது! என்ன சிறு வருத்தமென்றால், சுற்றுலாவுக்குத் தூண்டிய அவர், இன்று நான் உலகைச் சுற்றி வருவதைப் பார்த்து மகிழ, உயிருடன் இல்லை! புதிய இடங்களைப் பார்க்கும் போதெல்லாம் மாமாதான் ஞாபகத்திற்கு வருகிறார்!
நாம் போவது இன்பச் சுற்றுலா தான் என்றாலும், அதுவே கல்விச் சுற்றுலாவாகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சுற்றுலாவாகவும், ஆன்மீக மற்றும் அட்வெஞ்சர் சுற்றுலாவாகவும், ஏன்? கல்சுரல் மற்றும் கல்லினரி சுற்றுலாவாகவும் கூட அமைந்து விடுவதுண்டு! ஏனெனில், இன்பமாகப் பொழுதைக் கழிக்கச் செல்கையில், மியூசியம் மற்றும் மிருகக் காட்சி சாலை செல்கிறோம்! அங்கு நாம் அறிந்திராத பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்போது அது கல்விச் சுற்றுலாவாகி விடுகிறது! கல்வி கற்க வயது ஒரு பொருட்டல்லவே! ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளிலுள்ள மிகப்பெரிய சர்ச்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்கையில் அது ஆன்மீகச் சுற்றுலாவாகிறது! அங்குள்ள பொழுது போக்கும், உயர்வேகச் சாதனங்களில் பயணிக்கும் போது அட்வெஞ்சர் சுற்றுலாவாகி விடுகிறது! சுற்றுப்புறத் தூய்மையை அவர்கள் பேணும் பாங்கினை அறிகையில், அது சுற்றுச் சூழல் சுற்றுலாவாகி விடுகிறது! அவர்களின் பண்பாட்டையும்,பழக்க வழக்கங்களையும் அங்கேயே தங்கிப் பார்க்கையில், கல்சுரல் சுற்றுலாவாகவும், உணவுகளின் வகைகளை ஆவலுடன் தெரிந்து கொள்ளும்போது, கல்லினரி
சுற்றுலாவாகவும் நம் இன்பச் சுற்றுலா மாறிப் போகிறது!
நான் இடும்பவனத்தில் ஏழாம் வகுப்பில் படிக்கையில் தஞ்சாவூரையும், அப்பொழுது புதிதாக வந்திருந்த தஞ்சை மருத்துவக்கல்லூரியையும் காண்பதற்காகப் பள்ளி மூலம் கல்விச்சுற்றுலா சென்றேன்! அதன்பிறகு சென்னை, பெங்களூர், மைசூர், ஊட்டி, கொடைக்கானல், புவனேஷ்வர், ஐதராபாத், டெல்லி, என்று உள் நாட்டிலும், சிங்கப்பூர், மலேசியா, என்று வெளிநாடுகளிலும், சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்! பின்னர், ரோம், இத்தாலி, வாட்டிகன், வெனிஸ், பிசா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அலக்சாண்ட்ரியா, வாஷிங்டன், நியூயார்க் என்று அமெரிக்க
நாடுகளிலும் பயணம் செய்துள்ளேன்! தஞ்சை மற்றும் சென்னை பயணங்களைத் தனியாகவும், மற்றும் நண்பர்களுடனும் மேற்கொண்டேன்! மற்ற அனைத்துச் சுற்றுலாக்களுமே குடும்பத்தாருடன்
தான்!
இதுவரை நான் மேற்கொண்ட அனைத்துச் சுற்றுலாக்களுமே மனதுக்கு இதமளித்தவைதான்! இருப்பினும், சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுலா சற்று வித்தியாசமானதால், மனதை நிறைத்துள்ளது! முன்பெல்லாம் விமானத்தில் தலைமையிடம் சென்று, பல இடங்களுக்கும் செல்ல, அங்குள்ள மெட்ரோ மற்றும் டாக்சிகளில் பயணம் செய்வோம்! அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுலாக்களின் போது, எந்த நாட்டிலும் நாங்கள் ஹோட்டல்களில் தங்கியதில்லை! தனியாக வீடு எடுத்து, அவ்வீட்டில் தங்கியே பல இடங்களுக்கும் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்!