/

தினமணி இணையதள வாசகர்களுக்கான ‘ பொங்கலோ பொங்கல்’ கலர்ஃபுல் ரங்கோலி கோலப்போட்டி!

பொங்கல் என்றதுமே மறவாமல் ஞாபகத்துக்கு வரக்கூடியது காலங்காலையில் அம்மாக்கள், சித்திக்கள், அத்தைகள், மற்றும் அக்காக்களால் வாசலை அடைத்துப் போடப்படும் கலர்ஃபுல்லான கோலங்களும் தான்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2018, 9:34 am

பொங்கல் என்றதும் உங்களுக்கு என்னவெல்லாம் ஞாபகம் வரும்?

சர்க்கரைப் பொங்கல்!

கரும்பு!

ஜல்லிக்கட்டு!

காணும் பொங்கலன்று கிராமங்களில் நடத்தப்படும் மஞ்சள் நீராட்டம்!

நகரங்களில் குறிப்பாக நண்பர்களையும், உறவினர்களையும் காணும் பொங்கலில் காணும்பொருட்டு மெரினாவில் திரளும் லட்சக்கணக்கான மக்கள்! இத்யாதிகளுடன்...

பொங்கல் என்றதுமே மறவாமல் ஞாபகத்துக்கு வரக்கூடியது அதிகாலையில் அம்மாக்கள், சித்திக்கள், அத்தைகள், மற்றும் அக்காக்களால் வாசலை அடைத்துப் போடப்படும் கலர்ஃபுல்லான கோலங்களும்தான்.

Story image

முன்பெல்லாம் புள்ளி வைத்துப் போடப்படும் நெளி கோலங்கள் பிரசித்தம். ஆனால் இப்போது சித்திரக் கைத்திறன் மிக்க ரங்கோலிகள் வீட்டு முற்றங்கள்தோறும் வலிய ‘ஹலோ’ சொல்லிப் பிரியமாய்ப் புன்னகைக்கின்றன. கடந்து வந்த இத்தனை தை மாதங்களில் பொங்கல் பண்டிகையும், ரங்கோலியும் அத்தனை பாந்தமான நட்பாகிவிட்டன.

அந்த அழகான நட்பை முன்னிட்டு, அடடா... தைப்பொங்கல் வருகிறதே, இந்த மாதம் தினமணி இணையதளம் (www.dinamani.com) ஸ்பெஷலாக வாசகர்களுக்கு என்ன போட்டி வைக்கலாம் என்று யோசித்தபோது சட்டென்று வந்து குதித்தது இந்த ஐடியா! கடந்த மூன்று போட்டிகளிலும் வாசகர்களுடனான தொடர்பு என்பது வெறுமே மின்னஞ்சல் வரையில் மட்டுமே நீடித்திருந்தது. இந்தமுறை வாசகர்களை நாம் நேரில் சந்தித்தால் என்ன என்று தோன்றியதால் இந்தப் போட்டியை பொங்கல் ஸ்பெஷல் ரங்கோலி கோலப்போட்டியாகத் திட்டமிட்டோம். 

ஜனவரி 17 ஆம் நாள், சென்னை, விருகம்பாக்கம், சந்திரா மெட்ரோ மாலில் இருக்கும் ஐநாக்ஸ் திரையரங்க வளாகத்தில் தினமணி இணையதளம் சார்பாக ‘பொங்கலோ பொங்கல்’ கலர்ஃபுல் ரங்கோலி கோலப்போட்டி’ நடைபெறவிருக்கிறது. ஆகவே, போட்டிக்குப் போட்டியாகவும் ஆச்சு, தமிழர் பாரம்பரியத் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு வாசகர்களை நேரில் சந்தித்தது போலும் ஆச்சு. 

பொங்கல் 14 ஆம் தேதி தானே, நீங்கள் போட்டியை 17 ஆம் தேதி வைத்துவிட்டு பொங்கலோ பொங்கல் சொன்னால் எப்படி?! என்று சிலருக்குத் தோன்றலாம். அதுவும்கூட வாசகர்கள் வசதிக்காகத்தான். பொங்கல் தினத்தன்று நம் இல்லத்தரசிகளுக்கு நிச்சயமாக வீட்டை விட்டு வெளியேற விருப்பமிருக்காது. கொண்டாட்ட வேலைகளில் அவர்களுக்கு மூச்சு விடக்கூட நேரமிருக்காது. அவர்களும் தங்களது வேலைப்பளுவில் இருந்து, விட்டு விடுதலையாக வேண்டும்தானே! அதற்காகத்தான் இந்த அவகாசம். வீட்டுப் பொங்கல் முடிந்து ரிலாக்ஸ் ஆனதும், இருக்கவே இருக்கிறது தினமணி இணையதளத்தின் பொங்கலோ பொங்கல்! இந்தப் பொங்கல் ஸ்பெஷல் ரங்கோலிப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றால் கசக்குமா என்ன? கரும்பு தின்னக் கூலியா என்கிறீர்களா? அப்படியானால், உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களைத் துல்லியமாக வாசித்துவிட்டு ஜரூராகப் போட்டிக்குத் தயாராகுங்கள்.

போட்டியில் முதல் மூன்று இடங்களை வெல்பவர்களுக்கு தினமணி இணையதளம் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கத்தின் சிறப்புப் பரிசு மழை உண்டு!

போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் செய்ய வேண்டியவை

  • போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் வீட்டிலோ அல்லது நோட்டிலோ (Notebook)  ரங்கோலி இட்டு அதைப் புகைப்படமெடுத்து எங்களுக்கு மின்னஞ்சலில் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும்.
  • ஒரு வாசகர் ஒரே ஒரு ரங்கோலி மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட ரங்கோலிகள் நிராகரிக்கப்படும்.
  • ரங்கோலி அனுப்பும் வாசகர்கள் ரங்கோலியுடன் தங்களது புகைப்படம் ஒன்றையும் பெயர், முகவரியுடன் இணைத்து அனுப்ப வேண்டும். 
  • அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dinamani.readers@gmail.com.

  • அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் : 9841583300

  • போட்டிக்கான விண்ணப்பங்கள் எங்களை வந்தடைய வேண்டிய கடைசித் தேதி: 15.01.18.
  • அனுப்பப்படும் ரங்கோலிகளில் இருந்து நடுவர்கள் மூலமாக 10 சிறந்த ரங்கோலிகள் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சென்னைக்கு அழைக்கப்படுவார்கள். 
  • மின்னஞ்சல் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட 10 வாசகர்கள் சென்னை விருகம்பாக்கம், ஐநாக்ஸ் திரையரங்கத்திற்கு வந்து, தினமணி இணையதளத்தின் ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலிப் போட்டியில் கலந்துகொண்டு தங்களது கைப்பட கோலமிட்டுக் காட்ட வேண்டும்.
  • கோலமிடத் தேவையான வெள்ளை மற்றும் வண்ணக் கோலப்பொடிகள், தினமணி இணையதளம் சார்பில் வழங்கப்படும். வாசகரகள் கொண்டுவரத் தேவையில்லை.
  • சிறந்த 10 கோலங்களில் இருந்து தினமணி இணையதள நடுவர் குழு மூலமாக முதல் மூன்று பரிசுக்குரிய கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு ,உடனடியாகப் பரிசுகள் வழங்கப்படும்.

இறுதிப்போட்டி நடைபெறும் நாள்: 17.01.18.

போட்டியில் கலந்துகொள்ளும் வாசகர்கள் அனைவருக்கும் தினமணி இணையதளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Related Article

தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!

தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்!

இந்திய தபால் தினத்தை முன்னிட்டு தினமணி.காம் அறிவித்த கடிதப் போட்டியில் தேர்வான சிறந்த கடிதங்கள் வாசகர்கள் பார்வைக்கு!

இன்லண்ட் லெட்டரை மறக்க முடியுமா? வாசகர்களே தினமணிக்கு கடிதமெழுத ஒரு நல்வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.