கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இயக்குநர் செல்வராகவன்: ரசிகர்கள் கொண்டாடிய ஐந்து படங்கள்!

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று வரிசையாக சிக்ஸர்கள் அடித்தவர்... 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:04 pm

எழில்

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் புயலெனத் தோன்றி அதுவரை பின்பற்றி வரும் விதிமுறைகளை மாற்றி எழுதுவார்கள். புதிய இலக்கணம் படைப்பார்கள். தனித்துவமும் புதுமையும் உள்ள அவர்களுடைய படங்களை ரசிகர்களும் தயக்கமில்லாமல் கொண்டாடுவார்கள். ஒரு புதிய தலைமுறையும் புதிய ரசனையும் அவ்வாறுதான் உள்ளே வரும். 

செல்வராகவன் அப்படிப்பட்டவர்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று வரிசையாக சிக்ஸர்கள் அடித்தவர். இன்றைக்கும் அவரிடமிருந்து ஒரு இமாலய சிக்ஸரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆறாவது சிக்ஸருக்காகப் பல வருடமாகக் காத்திருக்கிறார்கள்.

செல்வராகவனின் பிறந்தநாள் இன்று. அவர் இயக்கிய முக்கியமான படங்களை, அவர் அடித்த ஐந்து சிக்ஸர்களை இப்போது பார்ப்போம். 

*

கஸ்தூரி ராஜா ஒரு சினிமா இயக்குநராக இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று விரும்பினார். இருவர் டாக்டர் ஆனார்கள். தனுஷும் செல்வராகவனும் திரைத்துறையில் நுழைந்தார்கள். 

ஆர்வம் இல்லாமல் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்தார் செல்வராகவன். 2-வது வருடத்தின்போது கல்லூரிக்கே போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் டிகிரி முடித்துவிட்டு வந்து இதைச் சொல் என்று அவருடைய கோரிக்கையை மறுத்துவிட்டார் கஸ்தூரி ராஜா. அமெரிக்காவில் படிக்கச் சம்மதமா என்று கேட்டதற்கும் மறுத்துவிட்டார். 

பொறியியல் படிப்புக்குப் பிறகு திரைக்கதை எழுதுவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் செல்வராகவன். கடன் பிரச்னையால் இயக்குநர் கஸ்தூரி ராஜா தத்தளித்துக்கொண்டிருந்தபோது துள்ளுவதோ இளமை பட வாய்ப்பை செல்வராகவனுக்கு அளித்தார். இருந்த வீட்டையும் விற்றதால் இந்தப் படம் வந்துதான் குடும்பத்தை மீட்டெடுக்க வேண்டும் என்கிற நிலைமை. தனுஷ் கதாநாயகனாகவும் செல்வராகவன் இயக்குநராகவும் களமிறங்கினார்கள். 

இதன்பிறகு செல்வராகவனின் திறமையை தமிழ் சினிமாவும் ரசிகர்களும் அங்கீகரித்தது வரலாறாகிவிட்டது.

துள்ளுவதோ இளமை

Story image

யுவனின் பாடல்கள் மூலம் படம் எப்போது வெளிவரும் என அனைத்து தமிழ்நாட்டு இளைஞர்களையும் ஏங்கவைத்த படம். புதிய கதாநாயகன், புதிய கதாநாயகி, புதிய இயக்குநர் என்கிறபோதும் படம் வெளியான முதல் நாள் ஹவுஸ்ஃபுல்.

துள்ளுவதோ இளமை கதையை நாவலாக எழுதியுள்ளார் கஸ்தூரி ராஜா. அந்த நாவலை கடையில் வாங்கிய செல்வராகவன், அதைப் படித்துவிட்டு அப்பாவிடம் வந்து, இதைப் படமாக எடுங்கள் என்று கூறியுள்ளார்.

நான் கிராமத்துப் படங்களை எடுப்பவன், எனக்கு நகரமும் கிளாமரும் உள்ள இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்றார் கஸ்தூரி ராஜா. 

இதுதான் டிரெண்ட் என்ற செல்வராகவனிடம், அப்போ நீயே இயக்கிவிடு என்று சொல்லி, படத்தை ஆரம்பித்துள்ளார் கஸ்தூரி ராஜா.

பள்ளி, கல்லூரி விடுமுறைக் காலங்களில் படத்தை எடுத்துவிடலாம் என முடிவெடுத்தார் கஸ்தூரி ராஜா. ஆனால் கதாநாயகனின் வேடத்துக்குச் சரியான நபர் கிடைக்காததால் தனுஷைத் தேர்வு செய்தார். 

பள்ளிக்குச் செல்லவிருந்த தனுஷை நேராகப் படப்பிடிப்புத் தளத்துக்கு அழைத்துச் சென்று நடிக்க வைத்துவிட்டார். என் வாழ்க்கையைக் கெடுத்துட்டீங்களே என அழுதுப் பார்த்தார் தனுஷ். பள்ளி முடித்துவிட்டு நேராகப் படப்பிடிப்புக்குச் சோகத்துடன் செல்வார். 

முதல் 6 படங்கள் வரை சினிமாவில் நடிக்க இஷ்டம் இல்லாமல் இருந்தார் தனுஷ். ஆனால் செல்வராகவன் இயக்குநர் ஆவது என்பது கிட்டத்தட்ட திட்டமிட்டு செய்தது என்கிறார் கஸ்தூரி ராஜா.

தான் இயக்கிய முதல் படத்திலேயே நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் அனுப்பினார் செல்வராகவன். படத்தில் நகரத்து பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தினார். தைரியமாகக் காட்சிகளை அமைத்தார். வசனங்களில் பாசாங்கு இல்லை. மாணவர்களின் காமம் கலந்த காதல் காட்சிகளும் பாலியல் வசனங்களும் தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருந்தன. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள். 

இந்தப் படத்தை முழுவதும் இயக்கியர் செல்வராகவன் தான். ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் இயக்குநரின் பெயராக கஸ்தூரி ராஜாவின் பெயர் தான் இருந்தது. 

அப்படிப் போட்டால் தான் படத்தை விற்கமுடியும் என்பதால் தனக்கான இடத்தை விட்டுக்கொடுத்தார் செல்வராகவன். எனினும் படத்தைப் பார்த்தவர்கள், நிச்சயம் இது கஸ்தூரி ராஜா இயக்கிய படமல்ல என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

அப்போது திரையுலகம் புதுமுகங்களை வரவேற்கவில்லை. நட்சத்திரங்கள்தான் திரையுலகை ஆண்டார்கள். நான் தான் படத்தை இயக்கினேன் என்பதைத் திரையுலகம் அறியும் என்கிறார் செல்வராகவன்.

படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவுக்கு தனுஷ், செல்வராகவன் என இரு புதிய நட்சத்திரங்கள் கிடைத்தார்கள். நட்சத்திர அந்தஸ்து பெற்றார் யுவன் சங்கர் ராஜா.


காதல் கொண்டேன்

Story image

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட, அக உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்கும், வினோதமான குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்தில் தனுஷ். இந்தக் கதாபாத்திரத்தை எல்லோரிடமும் எல்லா இடங்களிலும் காண முடியாது. அப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்துடன் 2-வது படத்தை இயக்கினார் செல்வராகவன். ரசிகர்களை ஒரு வினோத உலகுக்கு அழைத்துச் சென்றார்.

நண்பன், காதலர் என இருவருக்கிடையே மாட்டிக்கொள்ளும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தினார் சோனியா அகர்வால். 

செல்வராகவனின் திரைக்கதை உத்தி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சோனியா அகர்வாலை அவருக்குத் தெரியாமல் கடத்திக்கொண்டு போவார் தனுஷ். அதற்கு முன்பு ஒருவரைக் கொலை செய்துவிடுவார். பிணத்தைப் பெட்டியில் மறைத்துவிடுவார். பிணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்கும்போது, இன்னொரு பக்கம் கொண்டாட்டமாக தனுஷும் சோனியா அகர்வாலும் ஜீப்பில் சென்றுகொண்டிருப்பார்கள். இதன்மூலம் சோனியாவையும் தனுஷ் ஏதாவது செய்துவிடுவாரா என்று ரசிகர்களைப் பதறவைத்தார் செல்வராகவன். 

இந்தப் படத்தில் சுதீப்புடன் பாடலின் பின்னணியில் சண்டை போடுவார் தனுஷ். இந்தக் காட்சிக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தார்கள். இந்தக் காட்சியின்படி முதலில் பாடல் இல்லை. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் செல்வராகவனுக்குப் பாடலை சண்டைக்காட்சியின்போது பயன்படுத்தவேண்டும் என்று தோன்றியது. உடனே, தீம் இசையை ஓடவிட்டு சண்டைக்காட்சியைப் படமாக்கியுள்ளார். இதுபோல பாடல்களும் பரபரப்பான காட்சிகளும் இளைஞர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டன. செல்வராகவன் செல்வராகவன் தான் என ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 

அடுத்ததாக, போனி கபூர் தயாரிப்பில் காதல் கொண்டேன் படத்தை ஹிந்தியில் எடுக்க முயன்றார் செல்வராகவன். அப்படியே தொடர்ந்து ஹிந்திப் படங்களை இயக்கவும் திட்டமிருந்தார். ஆனால் காதல் கொண்டேன் ஹிந்திப் படம் முதல் கட்டத்திலேயே நின்றுவிட்டது. 

7ஜி ரெயின்போ காலனி

Story image

தனது 3-வது படத்தில் இளைஞர்களின் வழக்கமான காதலை வெளிப்படுத்தினார் செல்வராகவன். 2-வது படத்தின் கதாநாயகன் போல வினோதமான கதாபாத்திரம் கிடையாது. படம் பார்த்த இளைஞர்கள் தங்களுடைய கதையைத்தான் செல்வராகவன் சொன்னதாக உணர்ந்தார்கள். 

சாதாரணமான இளைஞன் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. நன்குப் படித்த, வசதியான ஆண்களுக்குத்தான் காதலிகள் அமைகிறார்கள். ஆனால் ரவி கிருஷ்ணா போன்ற ஒரு கதாபாத்திரத்தை அவனை விடவும் படிப்பிலும் அந்தஸ்திலும் அதிகமாக உள்ள சோனியா அகர்வாலுக்குப் பிடிக்குமா என்கிற கேள்வியுடன் படத்தின் மையக்கதை அமைந்தது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு காதல் கதை அவர்களுக்குக் கிடைத்தது.

இது என் கதை என்று படவெளியீட்டுக்கு முன்பே அறிவித்தார் செல்வராகவன். தான் பார்த்த, தன்னுடன் பழகிய கேகே நகர் மனிதர்களைப் படத்தின் கதாபாத்திரங்களாக மாற்றிக் கதை எழுதினார். நான் ஒரு மெக்கானிகல் என்ஜினியர்.  70% தான் மதிப்பெண்கள் எடுத்தேன். என்னால் நாட்டின் சிறந்த மெக்கானிகல் என்ஜினியர் ஆகமுடியாது என்று தெரியும். நான் ஒரு சராசரி மாணவன். என் திறமையை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. 12, 15 முயற்சிகளில் ஈடுபட்டு என் திறமையைக் கண்டறிய முயற்சி செய்தேன். கடைசியில் திரைக்கதை எழுதுவதில் தான் என்னுடைய ஆர்வம், திறமை உள்ளது என்பதைக் கண்டறிந்தேன் என்கிறார் செல்வராகவன். அதேபோல இந்தப் படத்திலும் சரியாகப் படிக்காத ரவி கிருஷ்ணாவின் திறமையை சோனியா அகர்வால் கண்டறியும் காட்சி ஒன்று இடம்பெற்றது. தனக்குப் பிடிக்காத மெக்கானிகல் என்ஜினியரிங்கை கதாநாயகனின் ஆர்வமாக மாற்றினார்.

7ஜி ரெயின்போ காலனி, ஸ்டாக்கிங்கை மறைமுகமாக வலியுறுத்தும் படம். பாதிப்படத்தில் கதாநாயகியைப் பின்னால் துரத்தியபடி தான் கதாநாயகன் செல்வார். அதன்வழியாகவே தன் காதலில் வெற்றியடைவார்.

இன்று இந்தப் படம் வெளிவந்திருந்தால் ஸ்டாக்கிங்கைக் கொண்டாடுகிறது என ரெமோ படத்துக்கு வந்த விமரிசனங்கள் போல இதற்கும் வந்திருக்கும். 

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் செல்வராகவன்.

அந்தப் படத்தை அப்படியே இன்று எடுக்கமாட்டேன். அப்போது செல்போனோ, வாட்சப்போ கிடையாது. அவள் பின்னாடி சென்றுதான் கதாநாயகனால் ஈர்க்கமுடியும். இப்போது அந்தக் கதையை எடுப்பதாக இருந்தால் காட்சிகளை மாற்றிவிடுவேன் என்கிறார். மேலும் இயக்குநருக்கு சமூகத்தின் மீது ஒரு பொறுப்பு இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். 

மயக்கம் என்ன படத்தில் வரும் அடிடா அவளை பாட்டையும் தவறு என ஒப்புக்கொள்கிறார் செல்வராகவன். நாங்கள் தவறு செய்துவிட்டோம். வருங்காலத்தில் கவனமாக இருப்போம். பெண்கள் குறித்து இயக்குநர்கள் கவனமுடன் காட்சிகளை அமைக்கவேண்டும் என்கிறார். 

புதுப்பேட்டை

Story image

7 ஜி ரெயின்போ காலனியை ரசிகர்கள் கொண்டாடிய பிறகு செல்வராகவன் மிகுந்த நம்பிக்கையுடன் இயக்கிய படம் - புதுப்பேட்டை. செல்வராகவனுக்கு மட்டுமல்லாமல் தனுஷுக்கும் கெளரவம் சேர்த்த படம்.

ரெளடியாகவும் தாதாவாகவும் தமிழ் சினிமா கதாநாயகர்கள் அதிகமாக வலம் வந்த நேரம் அது. ஆனால் அத்தனை தாதா படங்களிலும் வித்தியாசமாக இருந்தது புதுப்பேட்டை. தளபதி, பாட்ஷா என சூப்பர் ஹிட் ஆன தாதா படங்களின் வரிசையில் புதுப்பேட்டைக்கு வசூல் ரீதியில் இடம் கிடைக்காவிட்டாலும் ரசிகர்களின் உள்ளத்தில் கம்பீரமான இடம் கிடைத்தது. 

ரெளடியின் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களையும் அரசியல்வாதிகளும் பெண்களும் ஒரு ரெளடியை எப்படிப் பாதிக்கிறார்கள் அல்லது ஒரு ரெளடி அரசியல்வாதிகளையும் பெண்களையும் எப்படிப் பாதிக்கிறான் என்பதையும் சற்று விரிவாகவும் ஆழமாகவும் பார்த்த படம். தனுஷ் ஏற்று நடித்த கொக்கி குமார் கதாபாத்திரம் ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரமாகியது. கொக்கி குமாரு கடைசியில் அமைச்சராக உயரும்போது கதை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துவிடுகிறது. இதனால் தான் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியை இன்றும் எதிர்பார்க்கிறார்கள்.

நேரம் வரும்போது புதுப்பேட்டை 2 நிச்சயம் உருவாகும் என்று சொல்லியிருக்கிறார் செல்வராகவன். 

ஆயிரத்தில் ஒருவன்

Story image

கடந்த வருடம், செல்வராகவனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்கள் மீண்டும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் அமோக ஆதரவளித்தார்கள். அதிலும், ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது பார்க்காத வரவேற்பைக் கடந்த வருடம் பார்க்க முடிந்தது.

எங்களை மன்னிச்சுடுங்க, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அருமையைத் தெரியாமல் இருந்துவிட்டோம் என ரசிகர்கள் பலரும் விடியோக்களில் பேட்டியளித்தார்கள். இதனால் ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றிய கேள்விகள் உண்டானது.

இதுபற்றி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:

படம் வந்தபோதே கொண்டாடியிருந்தால், தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 வந்திருக்கும். இனிமேல் அந்தப் படத்தைக் கொண்டாடி எதுவும் ஆகப்போவதில்லை. படம் வந்தபோது எனக்கோ செல்வாவுக்கோ ராம்ஜிக்கோ எந்தப் பாராட்டும் கிடைக்கவில்லை. ஒரு விருதும் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் பேசினார். 

இது என்ன மாதிரி படமாக வெளிவரும் என்கிற புதிருடன் ஆரம்பிக்கப்பட்ட படம். கதையும் களமும் புதிது என்றபோதும் துணிச்சலாக இறங்கினார் செல்வராகவன். சோழர்களின் வரலாற்றுப் பின்புலத்துடன் அட்டகாசமான கதையை எழுதியதோடு படமாக்கத்தில் ஹாலிவுட்டின் அருகில் சென்றார். அதனால் இதுவரை இப்படியொரு தமிழ்ப் படத்தைப் பார்த்ததில்லை என்று ரசிகர்களை எண்ணவைத்தார்.

ஒரேமாதிரியான படம் எடுக்கக் கூடாது, எல்லோரும் எடுக்கும் கதையையும் வித்தியாசமாகக் காட்டக்கூடாது. தமிழ் சினிமா இதுவரை தொடாத ஒரு கதையாக இருக்கவேண்டும் என எண்ணி செல்வராகவன் உருவாக்கிய படம்தான் ஆயிரத்தில் ஒருவன். வழக்கமாக ஒரு படத்தின் திரைக்கதைக்காக 10 நாள்கள் மட்டும் எடுத்துக்கொள்வார். ஆனால், இந்தப் படத்துக்காக அவர் 3-4 மாதங்கள் செலவிட நேர்ந்தது. மேலும் முதல்முறையாகத் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி கதை எழுதாமல் கற்பனை உலகுக்குச் சென்று கதையைப் பிடித்தார். 12-ம் நூற்றாண்டுச் சோழர்களின் வாழ்க்கையை விவரிப்பதற்காகத் தொல்லியாளர்களின் உதவியை நாடினார். வரலாற்றுப் பின்புலத்தில் நிகழ்காலத்தில் நடக்கும் கதை என்பதே தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருந்தது. 

செல்வராகவனின் சாயல் தெரியாமல் இந்தப் படத்தில் நடித்தார் கார்த்தி. (இதற்கு முந்தைய செல்வராகவனின் படங்களில் அவருடைய பாதிப்பில் தான் கதாநாயர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்). இரண்டாம் பாதியில் இதுவரை கேட்டிராத பழந்தமிழ் என்றாலும் ரசிகர்கள் புகார் அளிக்கவில்லை. அசல் தமிழ் மன்னனைக் கண் முன் நிறுத்தினார் பார்த்திபன். திரைக்கதையைக் காட்சிப்படுத்துதலில் செல்வராகவன் அமர்க்களப்படுத்தியதாக திரையுலகம் செல்வராகவனை வியந்து பார்த்தது. 2 வருட உழைப்புக்கான பலன் வசூலில் பிரதிபலிக்காவிட்டாலும் ஓர் இயக்குநராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றார் செல்வராகவன்.  

ஆயிரத்தில் ஒருவன் படத்தை என்னால் இன்னொருமுறை எடுக்கமுடியாது என்று பேட்டியளித்தார் செல்வராகவன். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால் 3000 பேரை ப்ளூமேட்டில் வைத்துப் படமெடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது என்கிறார். இந்தப் படத்தை வெகு சீக்கிரமே எடுத்துவிட்டேன். இன்னும் பல அனுபவங்கள் கிடைத்தபிறகு எடுத்திருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து. 1 வருடம் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பிறகு மேலும் ஒரு வருடம் கிராபிக்ஸ் உள்ளிட்ட பல பணிகளுக்குத் தேவைப்பட்டன. 

வெளியே எங்குச் சென்றாலும் நண்பர்கள் புதுப்பேட்டை  2 எப்போது என்று அன்பாகக் கேட்கின்றனர். நடக்கும் எனச் சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார் செல்வராகவன். காத்திருப்போம். 

Story image


ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே என மூன்று தமிழ்ப் படங்களை இயக்கினார் செல்வராகவன். மூன்று படங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்த்த ஆறாவது சிக்ஸராக அமையவில்லை. 

இதுதவிர செல்வராகவன் இயக்கிய 3 படங்கள் பாதியில் நின்றும் வெளிவராமலும் உள்ளன. சிம்பு நடிப்பில் காண் என்றொரு படம் எடுத்தார். சில நாள்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம், 2017-ல் வெளியாக வேண்டியது. தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற பின்பும் இன்றுவரை வெளியாகவில்லை. இதன்பிறகு சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கினார் செல்வராகவன். அதுவும் வெளிவரவில்லை. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.