டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அஜித் - ஷாலினி 20-வது திருமண நாள்: சினிமாவை மிஞ்சிய காதல்!

சினிமாவில் பார்த்த காதல் காட்சிகளையெல்லாம் நேரில் பார்க்கும் வாய்ப்பு சரணுக்குக் கிடைத்திருக்கிறது.   ..

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:31 pm

எழில்


அமர்க்களம் படம் அஜித்துக்கு இரு திருப்புமுனைகளை அளித்தது.

ஒரு ஆக்‌ஷன் நடிகராக அஜித்தை முன்னேற வைத்ததில் அமர்க்களம் படத்துக்கு முக்கியப் பங்குண்டு.

1996-ல் காதல் கோட்டை படம் வெற்றி பெற்ற பிறகு நிறைய காதல் படங்களில் நடித்து வந்தார் அஜித். இந்நிலையில் 1999-ல் வெளியான சரண் இயக்கிய அமர்க்களம் படம் ஒரேடியாக அவருடைய அந்தஸ்த்தை உயர்த்தியது.

சினிமாவில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் அஜித்துக்குப் புதிய அத்தியாயத்தை எழுதியது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் அஜித்தும் ஷாலினியும் காதலித்து பிறகு 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

தமிழில் கதாநாயகியாக நடித்த காதலுக்கு மரியாதை படத்துக்குப் பிறகு மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார் ஷாலினி. குடும்பப்பாங்கான வேடம்  என்பதால் அமர்க்களம் படத்துக்காக ஷாலினியிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குநர் சரண். அப்போது சினிமாவை விட்டு விலகி, படிப்பில் கவனம் செலுத்த முடிவெடுத்திருந்தார் ஷாலினி. குஞ்சுமோன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்திருந்தார். அதனால் அமர்க்களம் பட வாய்ப்பையும் முதலில் மறுத்துவிட்டார். இதை அஜித்திடம் கூறியுள்ளார் சரண். உடனே அஜித்தே ஷாலினிக்கு போன் செய்து படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஷாலினியின் தோழிகள் பலரும் அஜித்தின் ரசிகைகள். இதன்பிறகு சரண் இயக்கிய காதல் மன்னன் படத்தைப் பார்த்தார் ஷாலினி. படமும் அஜித்தும் பிடித்துப்போக உடனே படத்தில் நடிக்கச் சம்மதித்துவிட்டார்.

Story image

இந்தக் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். முதலில் அஜித், ஷாலினி ஆகிய இருவரையும் வைத்து தனித்தனியாகப் படப்பிடிப்பு நடத்தினார் சரண். அன்றைக்குத்தான் இருவரும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு காட்சியில் ஷாலினியிடமிருந்து கோபமாகப் படப்பெட்டியை அஜித் பிடுங்கவேண்டும். இதற்கான ஒத்திகையின்போது காற்றில் அஜித் கத்தியை வீசியபோது, ஷாலினி கையில் கத்தி கிழித்து ரத்தம் வழிந்தோடியது. படக்குழு பதறியது. ஷாலினிக்குத் தேவையான முதலுதவியை உடனடியாக ஏற்பாடு செய்தார் அஜித். நெருக்கடியான தருணத்தில் அஜித் செய்த முதலுதவி ஷாலினியையும் ஷாலினி வெளிப்படுத்திய நிதானம் அஜித்தையும் உடனடியாகக் கவர்ந்துள்ளன. முதல் சந்திப்பிலேயே காதல் மலரத் தொடங்கியது.

அஜித் தன் காதலைத் தெரிவித்த விதமும் படக்காட்சியை மிஞ்சுவதாக இருந்தது. சீனிவாசா திரையரங்கில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஷாலினி முன்னிலையில் சரணிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறார் அஜித். சார், அமர்க்களம் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடித்துவிடுங்கள். நான் மற்ற படங்களுக்குக் கொடுத்துள்ள கால்ஷீட்டை இந்தப் படத்துக்கே கொடுத்துவிடுகிறேன். அதிக நாள் இந்தப் படத்தில் நடித்தால் ஷாலுவைக் காதலித்து விடுவேனோ எனப் பயமாக இருக்கு என்று ஷாலினியின் காதில் கேட்கும்படிச் சத்தமாகக் கூறியுள்ளார் அஜித். இதைக் கேட்ட ஷாலினி ஒரே சமயத்தில் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார். அதுதான் அவர்கள் காதல் தொடங்கிய தருணம், அஜித் காதலை வெளிப்படுத்திய தருணம்.

Story image

ஒரு காட்சியில் ஷாலினிக்கு பொக்கே ஒன்றை அஜித் தரவேண்டும். இந்த பொக்கேவை கம்பெனி காசில் வாங்கவேண்டாம், நானே கொடுத்து விடுகிறேன் என்று சரணிடம் கூறியுள்ளார் அஜித். ஆனால் அஜித், பொக்கேவை வாங்கி படப்பிடிப்புக்கு வரும்போது ஷாலினியின் தந்தை இதைப் பார்த்துவிட்டார். யாருக்காக இந்த பொக்கே என்று அஜித்திடம் கேட்டுள்ளார். அப்போது அலைபாயுதே படத்திலும் ஷாலினி நடித்து வந்தார். மாதவனும் சரிதாவும் காதலித்து வந்த சமயம் அது. இதை வைத்து, என் மூலமாக சரிதாவுக்கு மாதவன் பொக்கே வாங்கி அனுப்பியுள்ளார் தந்தையிடம் ஷாலினி கூறி சமாளித்துள்ளார். அஜித் தனக்குத்தான் பொக்கே வாங்கி வந்துள்ளார் என்பதை அவர் உணர்ந்துகொண்டதால் அப்போது அஜித்தைக் காப்பாற்றியுள்ளார்.

பிறகு நேரடியாக ஷாலினியிடம் சென்று, உன்னைக் கல்யாணம் செய்ய ஆசைப்படறேன் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் அஜித். இதை எதிர்பார்த்திருந்த ஷாலினி, எனக்கு ஓகே. அப்பாவிடம் பேசிவிடுங்கள் என்று அடுத்தக் கட்டத்துக்கான யோசனையை உடனே சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் பேசும்முன்பே தன் அப்பாவிடம் நடந்ததையெல்லாம் சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார் ஷாலினி.

Story image

அஜித் முதல் காதல் பரிசாக பொக்கே கொடுத்துவிட்டார். ஷாலினியும் ஏதாவது தரவேண்டும் அல்லவா! ஏராளமான பரிசுப் பொருள்களை சரணிடம் கொடுத்து சரியாக மே 1 அன்று நள்ளிரவு 12 மணிக்குத் தரச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பொருளையும் அஜித் எடுத்துப் பார்க்கும்போது எப்படி உணர்கிறார் என்பதை உடனே போனில் சொல்லவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார். திரைப்படங்களில் பார்க்கும் நண்பன் போல அஜித் - ஷாலினி காதலுக்கு தன்னாலான வரையில் உதவியிருக்கிறார் சரண்.

சின்ன பைக் உள்பட அஜித் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொன்ன அனைத்தையும் பரிசுப்பொருள்களாக அனுப்பியுள்ளார் ஷாலினி. அஜித் வீட்டுக்கு முன்பே சென்றுவிட்ட சரண், சரியாக 12 மணிக்குப் பரிசுப் பொருள்களைக் காண்பித்தவுடன் அஜித்திடம் ஆனந்தக் கண்ணீர். ஷாலினி சொன்னதுபோல அஜித் ஒவ்வொரு பொருளையும் எப்படி ரசித்துப் பார்க்கிறார் என்பதை அப்போதே போனில் சொல்லியுள்ளார் சரண். அதன்பிறகு சரணிடமிருந்து போனை வாங்கி காலை 6 மணி வரை ஷாலினியிடம் பேசியிருக்கிறார் அஜித். சினிமாவில் பார்த்த காதல் காட்சிகளையெல்லாம் நேரில் பார்க்கும் வாய்ப்பு சரணுக்குக் கிடைத்திருக்கிறது.   

Story image

காதல் திருமணம் நடந்தபிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார் ஷாலினி. ஷாலினி எனக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என இதற்கு விளக்கம் அளித்தார் அஜித். சந்தோஷத்துக்காக நடித்தேன். பணத் தேவைக்காகவோ புகழுக்காகவோ இல்லை. அடுத்தப் பொறுப்பு கிடைத்துவிட்டதால் நடிப்பிலிருந்து விலகிவிட்டேன் என்று திருமணமான புதிதில் பேட்டியளித்துள்ளார் ஷாலினி.

திருமணத்துக்கு முன்பு இருந்த பழக்கமான சிகரெட் பிடிப்பதை ஷாலினிக்காக விட்டுக்கொடுத்து விட்டார் அஜித். இருவருக்கும் அனௌஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள். காதலுக்கு மரியாதை தரும் விதத்தில் அமர்க்களமான வாழ்க்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.