ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துப்பாக்கி முனையில் ஒரு ரோஜா... லோகேஷ் கனகராஜின் டிசி - திரை விமர்சனம்!

டிசி திரைப்படத்தின் திரை விமர்சனம்....

நடிகர்கள் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:10 pm IST

டிசி - திரை விமர்சனம்

3/5

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான டிசி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காவல்துறையிடம் இருக்கும் துப்பாக்கிகளை லோகேஷ் கனகராஜும் அவரின் கேங்கும் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த ஆயுதங்களை விற்பனை செய்து ஓய்விலிருக்கும் வேளையில், மகனின் படிப்பிற்காக 7 லட்சத்தை வைத்திருக்கும் ஒரு தந்தையைக் காசுக்காக காவல்துறை அதிகாரி கொன்று புதரில் வீசியது தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தேவதாஸான லோகேஷ் கனகராஜிடம் உதவி கேட்க, காவல்நிலையத்திற்குள்ளே சென்று அந்த அதிகாரியைத் தன் குழுவினருடன் கொடூரமாக அடித்துக்கொல்கிறார் லோகேஷ். பின், தன் குழுவுடன் அடைக்கலத்திற்காக சென்னை செல்கிறார். அங்கு பாடகியான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மேல் ஈர்ப்பு வர, சில நாள்கள் அங்கே இருக்கிறார். ஆனால், அவரைத் தேடி வரும் காவல்துறையால் பெரிய அசம்பாவிதம் நடக்கிறது. காவல்துறையில் லோகேஷ் சிக்கிக்கொள்கிறார். அதற்குள்ளாகவா? என நினைத்தால் அதன்பின் கதை சூடிபிடிக்கிறது. தேவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்த லோகேஷ் ஏன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்? காவல்துறைக்கும் கேங்ஸ்டர்கள் என அறியப்படும் இவர்களுக்கும் ஏன் இந்த மோதல்கள் நடக்க வேண்டும் என்கிற மீதக்கதை சுவாரஸ்யமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் திரைப்பட வரிசையில் 4-வது படமாக டிசி தயாராகியுள்ளது. வன்முறையிலிருந்து வெளிப்படும் மனித உணர்வுகளையும் அதன் குலையும் சமநிலையை வன்முறையே சமன் செய்யும் எழுத்தாகவே டிசியையும் எழுதியிருக்கிறார். டிசி என்றால் தேவதாஸ், சந்திரா. இதில், சந்திரவாக நடிகை வாமிகா கபி அசத்தலான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பாலியல் தொழிலாளியான அவர் சொன்ன வார்த்தைக்காக இடைவேளைக் காட்சியில் சண்டையிடும் லோகேஷ் கனகராஜுடன் இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை சேர்ந்துகொள்ள திரையரங்கமே ஆர்ப்பரிக்கிறது. வன்முறை திரைப்படங்களுக்கு நாதம் சண்டைக் காட்சிகள்தான் என்றாலும் இம்முறை கொஞ்சம் உணர்வுகளையும் கடந்த வேண்டும் என்கிற முயற்சியில் அருண் மாதேஸ்வரன் முன்னேற்றம் கண்டிருக்கிறார். இடைவேளை சண்டைக் காட்சிக்கு வெறும் வன்முறை மட்டும் கைகொடுக்கவில்லை; அதற்கு முன் கீழ்மை நிறைந்த ஆண்களால் பெண்கள் எப்படி சிதைக்கப்படுகிறார்கள் என்கிற எமோஷன் நன்றாக வேலை செய்தது.

இனிய ஆச்சரியம் போல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கவனமாக நடித்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும் கதை நகர, நகர நியாயத்திற்காக செயல்படும் கொடூரமான நல்லவன் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டார். இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் அசத்தலான ஆக்‌ஷன்களைக் கொடுத்ததுடன் சஞ்சனாவைக் கடைசியாகச் சந்திக்கும் காட்சியில், உயிர் இருக்கு என அவர் கத்தும்போது தீவிரம் வெளிப்படுகிறது. நடிகராகவும் இனி லோகேஷின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பை இப்படம் உருவாக்கியுள்ளது.

Listicle image

நடிகைகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வாமிகா கபி இருவரை மிக அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இருவரும் உதட்டுச்சாயம் இட வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதனை அழிக்கும்போது இருவருக்கும் தேவையானது ஒன்றே ஒன்றுதான் என்பதை திரைக்கதையால் நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளது. வாமிகா சேலையுடன் இரண்டு துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிக்கொண்டு வரும் காட்சி அசத்தல்.

லோகேஷ் குழுவினராக நடித்தவர்கள், காவல்துறை அதிகாரியான ஸ்ரீ கிருஷ்ண தயாள் உள்ளிட்டோரும் சரியான தேர்வாக நடித்துள்ளனர்.

சோர்வை ஏற்படுத்ததாக அடுத்தடுத்தக் காட்சிகள், இவ்வளவு வன்முறை ஏன் கேள்விகளைக் கொடுக்காத அதற்கு பின் உள்ள காரணங்கள் என அனைத்திற்கும் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். என்ன ஒரு ஆல்பம்? டிசியை காப்பாற்றியதுடன் பின்னணி இசையென்றாலே நான்தான் என்கிற செய்தியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் அனிருத். இடைவேளைக் காட்சியில் லோகேஷ் கனகராஜ் பாலியல் விடுதியின் மாடிப்படிகளில் ஏறும் போது தொடங்கும் குறிப்பிட்ட பின்னணி இசை அடுத்த 10 நிமிடங்கள் வரை ரசிகர்களிடம் பரவசத்தைக் கொடுக்கிறது. வாமிகா கபிக்கும் லோகேஷுக்கும் இடையான உணர்வுத் தடுமாற்றங்களுக்குத் தன் மெல்லிசையில் அழகுபடுத்துகிறார். டைட்டில் கார்டிலேயே அற்புதமான பின்னணி இசையுடன் ஒவ்வொரு பெயராகத் திரையில் வருகிறது. அனிருத் இல்லையென்றால் டிசி கதைக்கு பலம் இருந்திருக்காது என்பதுதான் உண்மை.

ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜியின் க்ளோஸ் அப் ஷாட்டுகள், சண்டைக்காட்சிக்கான ஒளியமைப்பு அனைத்தும் இக்கதைக்கு உருவாக்க ரீதியாக காட்சி அனுபவத்தைத் தருகிறது. ஜிகே பிரசன்னாவின் எடிட்டிங்கும் சிறப்பு. இடைவேளை சண்டைக் காட்சியை கட் செய்த விதம், திரைக்கதையை மேலும் பிடிப்பாக மாற்ற நான்லீனியர் கட் என சோர்வைக் கொடுக்காத எடிட்டிங்.

அருண் மாதேஸ்வரன் தன் முந்தைய திரைப்படங்களின் தோல்வியிலிருந்து உணர்வுகளை எப்படி எழுத வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார் என டிசியில் தெரிகிறது. ஒவ்வொரு வன்முறையைத் தூண்டவும் அதனை அணைக்கவும் நமக்கென்ற உறவுகள் இருக்கின்றன என முடிவில் அந்த உணர்வு நிற்கிறது. ஆனால், அதில் இன்னும் பலம் கூடியிருக்கலாம். இரண்டு முறை காவல்நிலையத்திலிருந்து லோகேஷ் தப்பிப்பது, பல கொலைகளைச் செய்தாலும் இவர்களைத் தேடுவதில் சிரமப்படும் காவல்துறை குழு என லாஜிக் அடிவாங்கும் இடங்கள் இருப்பது பலவீனம். இருந்தாலும், நீண்ட நாள் கழித்து நல்ல ஆக்‌ஷன் திரைப்படமாகவே டிசி திரையில் தெறிக்கிறது. ரத்தமாகவும்... ரசிகர்களின் சப்தமாகவும்!

The film DC, featuring director Lokesh Kanagaraj in an acting role, has been released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.