கதையின் நாயகியான சாதனாவுக்கு தங்க மீன்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது. படம் தொடங்குவதிலிருந்து முடியும் வரை ஒரே மாதிரியாக கை விரல்களையும், முகத்தை கோணாலாகவும் வைத்துக் கொண்டு அவர் நடித்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒத்தரு மாரியே இன்னொருத்தரும் ஏன் இல்லைன்னு கேக்கறது எவ்வளவு பெரிய வன்முறை என்பது தொடங்கி பல வசனங்களுக்கு அரங்கில் கைத்தட்டல் பெறுகிறார் இயக்குநர் ராம். சில வசனங்கள் கவிதையாகவும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும், சமூகத்தைக் கேள்விக்குள்படுத்துபவையாகவும் அமைந்துவிடுவது ராம் என்னும் படைப்பாளரின் தனிச்சிறப்பு. நட்சத்திரங்களை மகளும், தந்தையும் எண்ணிப் பார்ப்பது ரசனைக்குரிய காட்சிகளில் ஒன்று. மகள் வயதுக்கு வந்ததும் என்ன இனி நான் எப்படி அவளை பார்த்துக்கொள்வது என்று உதடுகள் துடித்து கண்களில் கண்ணீர் மல்கும் காட்சி மம்முட்டி நடிப்புக்கு சாட்சி. இயற்கை ஆபத்தானது,இயற்கை புதிரானது, இயற்கை அழகானது என பல அத்தியாயங்களாக விரிந்து இயற்கை பேரன்புக்குரியது என்று முடிகிறது படம். கொடைக்கானலில் மலைகளுக்கு நடுவே பனிமூட்டம் கலைந்து செல்லும் காட்சி, பறவை தனது குஞ்சுகளுக்கு உணவூட்டும் காட்சி என்று தேனி ஈஷ்வரின் ஒவ்வொரு ஃப்ரேமும் கவிதை. பின்னணி இசை யுவன் சங்கர் ராஜா. இசைஞானியின் ராஜா என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டிவிட்டார் யுவன். படத்தில் பல இடங்களில் யுவனின் இசையே ரசிகர்களுக்கு பலவித உணர்வுகளை கடத்தி விடுகிறது.