அந்த நேர்காணலில் அப்படி என்ன சிறப்பு என்றால்? ஜெயலலிதா ஆரம்ப காலங்களில் ஊடகத்தினரிடம் எத்தனைக்கெத்தனை நட்புடன் இருந்து வந்தாரோ அத்தனைக்கத்தனை வெறுப்புடன் ஊடகத்தினரை வெறுத்த காலகட்டத்தில் மிகச்சிறப்பாக வழங்கிய நேர்காணல்களில் ஒன்று அது என்ற பெருமை அதற்கு உண்டு. ஜெயலலிதா அடிக்கடி மனம் திறந்து பேசக்கூடியவர் அல்ல. ஆனால், இந்த குறிப்பிட்ட நேர்காணலில் ஜெயலலிதா தன் மனதில் இருப்பதை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொண்டதோடு சிமியுடன் இணைந்து இந்திப் பாடலொன்றையும் பாடி இருப்பார். தான் பிறந்தது முதல் அரசியலில் தலைமைப் பதவிக்கு வந்தது வரை அத்தனை விஷயங்களையும் எவ்வித தடங்கலும் இன்றி ஜெயலலிதா பகிர்ந்து கொண்டது அந்த ஒரே ஒரு நேர்காணலில் மட்டுமே. எம் ஜி ஆருடன் தனக்கிருந்த நெருக்கம், ஷோபன் பாபுவுடன் இருந்த உறவு, தன் அம்மா மீதான தனது ஏக்கம், ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசியாக வாழும் ஆசை கொண்ட தன் ஆழ்மன அந்தரங்கம். இன்றைக்குத் திருமணம் ஆகியிருந்தால் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பெண்களுள் ஒருத்தியாகத் தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு அவர் சிமியுடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனேகமுண்டு அந்த நேர்காணலில்.