இரண்டு சிறுவர்கள், அவர்களின் அம்மா, வயதான ஆயா மற்றும் ஜெயிலில் இருக்கும் அப்பா, பக்கத்து வீட்டுச் சிறுவர் சிறுமிகள், அவர்களின் நண்பரான மத்திய வயது பழரசம், . இவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே காக்கா முட்டை. படம் ஆரம்பித்த அரை மணி நேரம் சிறுவர்களின் அப்பாவித்தனமும், தினமும் பத்து ரூபாய் சம்பாதிக்க அவர்கள் படும் போராட்டமும் காட்சிப்படுத்தப்படுகிறது. பையன்களுக்கு அவர்களின் ஆயாவிடம் ஒட்டுதல் அதிகம். தினமும் கோழிமுட்டை வாங்கிக்கொடுக்க இயலாத ஏழ்மை நிலை. ஆயா அவர்களை காக்கா முட்டை குடிக்கச் சொன்னதால் காக்காவுக்கு கொஞ்சம் சோறு வைத்து அதன் கவனத்தைத் திசை திருப்பி, மரத்தில் ஏறி முட்டைகளை எடுத்து குடிப்பார்கள். இப்பழக்கம் வெகுநாட்களாக அவர்களுக்கு இருப்பதால் அதுவே பட்டப் பெயர்களாகி அண்ணன் (விக்னேஷ்) பெரிய காக்கா முட்டை என்றும் தம்பி (ரமேஷ்) சின்ன காக்கா முட்டை என்றும் அவன் வாழும் குடிசைப்பகுதி சிறுவர்களால் அழைக்கப்படுகிறார்கள். அந்தப்பெயர்களால் அவர்களுக்கே பெருமை தான். அவ்வப்போது அம்மா (ஐஸ்வர்யா) காக்கா முட்டை குடிப்பதற்காக கண்டிக்கும் போதும் அவர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. தினமும் சாக்குப் பையை எடுத்துக் கொண்டு ரயில்பாதைகளில் கூட்ஸ் வண்டியிலிருந்து சிதறி விழும் கரிக்கட்டிகளைப் சாக்குப் பையில் பொறுக்கி, அதை கடையில் எடைக்கு எடைப்போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அழுக்கு உடை, பரட்டைத் தலை, உழைக்கும் சின்னஞ்சிறிய கரங்கள் ஆனால் சிரிப்புக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களுக்கும் பஞ்சமில்லை. வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் பால்யத்துக்கே உரிய அத்தனை விஷயங்களுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பள்ளிக்குப் போவதை அன்றாடப் பிழைப்பிற்காகவும் அப்பா ஜெயிலிலிருந்து விடுதலை ஆவதற்கான பணத்தை சம்பாதிக்க வேண்டிய சூழலாலும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.