சிம்புவின் ‘வாலு’ படம் வெளியாகக்கூடாது என சதி நடக்கிறது: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு!
நீதிமன்றம் இந்தப் படத்துக்கு என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன்...


சிம்பு நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள வாலு படம் ஜூலை 17-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட உள்ளது.
இந்த நிலையில், வாலு' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. 'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக 2013-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது வேறு நபர் மூலமாக படத்தை வெளியிட உள்ளார்கள். எனவே வாலு படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'வாலு' தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனால் 13-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
வாலு படம் குறித்து நிலவும் குழப்பங்களைத் தீர்க்க, இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் ஊடகங்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாலு படத்தின் விளம்பரத்தை ஜூன் 19-ம் தேதி முதல் விளம்பரப்படுத்தி வருகிறேன். விளம்பரங்களில் இடதுபுறத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும், வலது புறத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரையும், நடுவில் எனது நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் உள்ள விளம்பரத்தையே வெளியிடுகிறேன். என்னுடைய மகனுக்காகத்தான் இந்தப் படத்தை நான் வெளியிட முன்வந்துள்ளேன். மற்றபடி நான் சாதாரண மனிதன்தான்.
இவ்வளவு நாள் வழக்கு தொடராமல், வெளியீட்டுத் தேதி நெருங்கும் சமயத்தில் அவர்கள் வழக்கு தொடர காரணம் என்ன? அவர்கள் இந்த படத்தின் உரிமையைக் கொண்டாட நினைக்கிறார்களா? அல்லது நாங்கள் வெளியிடுவதை தடுக்க நினைக்கிறார்களா?
ரம்ஜானைக் கொண்டாட, இன்ஷா அல்லாஹ் என்றும் ஜூலை 19-ம் தேதி வெளியான விளம்பரத்தில் பதிவு செய்தேன். நான் இறைவன் மீது நாட்டம் கொண்டவன். அதனால்தான், அந்த வாசகத்தை ‘வாலு’ படத்தின் விளம்பரத்தில் பதிவு செய்தேன். இறைவன் இந்தப் படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17-ந்தேதி ‘வாலு’ வெளியாகும்.
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் போல படத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை. மேஜிக் ரேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. நிக் ஆர்ட்ஸ் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது. உடனே, நீதிமன்றம் இந்த வழக்கு இதே நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றம் எந்த இடத்திலும் படத்திற்கு இடைக்காலத் தடை என்று கூறவில்லை. இடைக்காலத் தடை என்பது தவறான புரிதல்.
சிம்பு நடிப்பில் 3 வருடத்துக்குப் பிறகு படம் வெளிவருகிறது என்றாலும் அவருடைய ரசிகர்கள் சிம்புவுக்கு பெரிய வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சிம்புவுக்கு எதிராக வாலு படம் வெளியாகக்கூடாது என சதி நடக்கிறது.
இந்த வழக்கு வருகிற 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் இந்தப் படத்துக்கு என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...