/

விஜய்யைப் பாராட்டிப் பேசியதைக் கொச்சைப்படுத்துகிறார்கள்: டி. ராஜேந்தர் ஆவேசம்!

புலி பட இசைவெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததால் சென்று பேசினேன்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:18 am

எழில்

வாலு படம் வெளிவர நடிகர் விஜய் உதவி செய்ததால் நன்றிக்கடனாக புலி படத்தை வெளியிடவும் தயார் என்று டி. ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள வாலு படம் வெளிவருவதில் பல சிக்கல்களைச் சந்தித்தது. எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி படம் வெளிவருவதாக இன்று டி. ராஜேந்தர் அறிவித்தார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஜூன் மாதம் 19-ம் தேதியிலிருந்தே ஜூலை 17-ம் தேதி வாலு படம் வெளியாகும் என்று நான் விளம்பரம் செய்தபோது வராத வழக்க, ுபடம் வெளிவர இருந்த கடைசி 10 நாள்களுக்கு முன்னால் ஒரு வழக்கு தொடரப்பட்டது. படம் வெளிவர தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த வழக்கு சுமூகமாக முடிந்துவிட்டது. ஆகஸ்ட் 14-ம் தேதி படம் வெளிவருகிறது.

ஒரு கருத்தைத் தெளிவுபடுத்துகிறேன். சிம்பு, தல அஜீத்தின் ரசிகர். வேலாயுதம் படத்தில் ஒரு காட்சி வரும். டிடிஆரிடம் விஜய் கூறுவார், எனக்கு டிடிஆரைத் தெரியாது. டி.ஆரைத் தான் தெரியும் என்று. இவ்வளவு தூரம் வளர்ந்த பிறகும் மனப்பக்குவம் கொண்டவராக உள்ளார் விஜய்.

புலி பட இசைவெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததால் சென்று பேசினேன். மனிதன் என்றால் நன்றி இருக்கவேண்டும். நமக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டினால் அவருக்கு நாம் நன்றிக்கடன் படவேண்டும். அன்றைக்கு நன்றிக்கடன் உள்ளவனாக நான் பேசியதைக் கூட சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். பொதுவாக எனக்குப் புலி என்றால் பிடிக்கும். நான் சோழ வம்சத்தில் இருந்து வந்தவன். தஞ்சை மாவட்டம். சோழனின் கொடி, புலிக்கொடி. புலி என்றால் டி. ராஜேந்தருக்கு இஷ்டம். அந்த எந்தப் புலி என்று நீங்கள் நினைத்துக்கொண்டாலும் பரவாயில்லை. அதனால் அன்றைய விழாவில் விஜய்யைப் பாராட்டினேன்.

தமிழ்நாட்டில் இன்று ஒரு படத்துக்குப் புலி என்று பெயர் வைத்த பி.டி. செல்வகுமாரின் (புலி படத் தயாரிப்பாளர்) உணர்வை மதிக்கிறேன்.

ஆண்டவனின் அருளால் நான் அத்தனை கோடிக்குச் சொத்து சேர்த்து வைத்துள்ளேன். தமிழ் சினிமாவில் எத்தனை பேர் உள்ளார்கள். என்ன ஆச்சு அவர்களுக்கு எல்லாம்? நான் அவர்களிடம் உதவி கேட்கவில்லை. தார்மீகமாக அண்ணனுக்கு என்ன பிரச்னை என்று விஜய் உதவி செய்ய வந்தார். ஒரு நடிகனுக்குப் பிரச்னை வந்தால், நடிகனின் கதை முடிந்தது என்று நினைக்கக்கூடிய உலகில், வித்தியாசமாக உதவி செய்ய முன்வந்தார் விஜய். அதற்கு என் மீது உள்ள அபிமானம் காரணமாக இருக்கலாம். அவர் என் ரசிகர் என்று சொல்கிறார். நானும் விஜய்க்கு உண்மையான ரசிகன்.

படம் 14-ம் தேதி வெளிவருகிறது என்றால் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்தால் தான் தேதி குறிக்கமுடியும். படம் வெளிவர நிறைய சிக்கல்கள் இருந்ததால் சென்னையில் மட்டும் வெளிவர சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சென்னை தவிர மற்ற எல்லா இடங்களிலும் படத்தை வெளியிடக் காத்திருந்தார்கள்.

இனிமேல் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக நிறைய படங்களை வெளியிடுவேன். புலி படத்தை சில ஏரியாக்களில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்றால் நான் தயார் என்று பி.டி. செல்வகுமாரிடம் கூறியுள்ளேன். எனக்குப் பக்கபலமாக இருந்தவர்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.