வால்மீகியின் சமஸ்கிருத மூல நூலுக்கு அடுத்தபடியாக மொத்தம் 300 விதமான ராமாயணங்கள் இருக்கின்றன. இந்தியா தாண்டியும் ராமாயணம் பயணித்திருக்கிறது. பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, நேபாள், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், மங்கோலியா, வியட்னாம், சீனா என பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான ராமாயணங்கள் புழங்குகின்றன. அவற்றின் வால்மீகி ராமாயணம் மற்றும் அத்புத ராமாயணம் எனும் இரண்டு நூல்களின் தாக்கத்திலும் மேலும் சமஸ்கிருத பண்டிதரான தனது தாத்தா அளித்த தகவல்களின் துணையோடும் ராமாயணத்தைப் பற்றிய மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் அமீஷ் படைத்தது தான் ‘சீதா - மிதிலாவின் போர் மங்கை’ எனும் இந்த நாவல். தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பு வாசிக்க எளிமையாக இருந்தாலும் ஹனுமனை சீதா ‘ஹனுண்ணா’ என்று விளிப்பதை சராசரி சம்பிரதாய திராவிட மனம் ஏற்கத்தான் இல்லை. ஏனெனில் நாமறிந்த ராமாயணத்தில் ஹனுமனுக்கு, சீதாபிராட்டி அன்னை ஸ்வரூபிணி.