மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக அருவியில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் காரணமாக, மக்களின் பாதுகாப்பு கருதி போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் (Western Ghats) கடந்த சில தினங்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து, கடுமையான கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின்வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அருவியில் வெள்ள நீர் ஆபத்தான அளவைத் தாண்டி, காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டோடி வருகிறது. பாறைகள் மற்றும் தரைப்பகுதிகள் தெரியாத அளவிற்குத் தண்ணீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருவதால், அங்குச் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதோ அல்லது அருவியின் அருகே செல்வதோ அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, "மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் மக்கள் பாதுகாப்பு கருதி கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று 06/06/2026-ம் தேதி தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றும் மேலும் மழை நின்று அருவியில் வெள்ளத்தின் வேகம் தணிந்து, நிலைமை முற்றிலும் சீரடையும் வரை கோவை குற்றாலத்திற்குள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சனிக்கிழமையான இன்று வார இறுதி விடுமுறையைக் கொண்டாடக் கோவை குற்றாலத்திற்குச் செல்லத் திட்டமிட்டு இருந்த உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள், வனத்துறையின் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இருப்பினும், ஆபத்தான இந்த வெள்ளக் காலத்தில் வனத்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிப் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் போளுவாம்பட்டி வன அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.