மத்திய அரசுக்கு எதிராக அதிலும் குறிப்பாக கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக தலைநகர் புது தில்லியில் சனிக்கிழமை(ஜூன் 6) அணிதிரண்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் நிறுவனர் அபிஜித் திப்கே ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதை முதன்மைக் கோரிக்கையாகக் கையிலெடுத்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இதர சில முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
கல்வித் துறையை மின்னணு முறையில் மாற்றம் செய்வதற்கு முன் முறையான பயிற்சி அவசியம்|நியாயமான முறையிலும் நம்பகத்தன்மையுடனும் போட்டித் தேர்வுகள் நடைபெற வேண்டும்
மாணாக்கரையும் பெற்றோர்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்துதல்|மாணவர்களின் மனநலனுக்கு உரிய கவனமும் அதற்கான அரசின் பொறுப்பேற்றலும்|மணிப்பூரில் இயல்பு நிலைக்கு கல்வி முறை திரும்புதல்
நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியான விவகாரம், சிபிஎஸ்இ விடைத்தாள் திரையிடல் முறையில் ஆன்லைனில் திருத்தம் செய்தலில் குளறுபடிகள் ஏற்பட்ட விவகாரம் ஆகியவையும் போராட்டக் களத்தில் சத்தமாக எதிரொலித்தன
பள்ளி மாணாக்கரும் அவர்தம் பெற்றோர்களும் இன்றைய அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது.
கடந்த காலத்தில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எதிரான அன்னா ஹசாரே தலைமையிலான போராட்டத்துடன், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளையோரின் ஆர்ப்பாட்டம் ஒப்பிடப்பட்டாலும், பாஜக ஆட்சிக்கு எதிரான பேரலையாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்ததா என்றால், அது கேள்விக்குறியே?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்ட வேண்டும் என்ற தங்கள் தரப்பு கோரிக்கைகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!