மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

தமிழர் உணவு மரபு ஐரோப்பியர்களுக்கு ஒரு புதிய உணவு தத்துவத்தை அறிமுகப்படுத்தியது.

தமிழர் உணவு மரபு ஐரோப்பியர்களுக்கு ஒரு புதிய உணவு தத்துவத்தை அறிமுகப்படுத்தியது. உணவு என்பது உடலைச் சீரமைக்கும் வழி; அது பருவநிலை, காலநிலை, உடல்நிலை சார்ந்தது என்பதை உணரத் தொடங்கினர்

கோப்புப்படம்.

பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் இன்று பல ஐரோப்பிய நகரங்களில் பொதுவெளியில் கொண்டாடப்படுகின்றன. இவை தமிழர்களுக்கான நிகழ்வுகளாக மட்டுமல்ல; பன்முக கலாசார அனுபவங்களாக மாறியுள்ளன. தமிழர்கள் ஐரோப்பிய கலாசாரத்தை மாற்றவில்லை; அதில் ஒரு புதிய அடுக்கை சேர்த்துள்ளனர்.

சித்த, ஆயுர்வேத மருத்துவ முறை மீதான ஆர்வம் ஆரோக்கிய போக்காகவும், யோகா-தியானம் ஒரு வாழ்க்கை முறை போக்காகவும், புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் குடியேற்றக் கலாசார அம்சமாகவும் புரிந்து கொள்ளப்படலாம். இந்த மூன்றையும் ஒரே கண்ணோட்டத்தில் இணைத்துப் பார்த்தால், அது மனிதனை மீண்டும் மனிதனாகக் காணும் முயற்சி என்பது புலனாகும்.

ஆரோக்கியம் என்பது நோயின்மை மட்டும் அல்ல; மன அமைதி, சமூக உறவு, உணவு, உறக்கம், வேலை–ஓய்வு சமநிலை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய நிலை என்ற புரிதல் வலுப்பெறுகிறது. வாழ்க்கை என்பது வேகமாக ஓட வேண்டிய போட்டி அல்ல; உணர்ந்து வாழ வேண்டிய ஓர் அனுபவம் என்ற எண்ணம் பரவுகிறது.

எதிர்கால ஐரோப்பிய சமூகத்தின் வடிவம் வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மட்டும் வரையறுக்கப்படாது. அதில் உடல், மனம், சமூகம், இயற்கை ஆகிய அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.அந்த இடத்தை உருவாக்குவதில் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளும், யோகாவும் தியானமும், புலம்பெயர் தமிழர்களின் அமைதியான வாழ்வியலும் தத்தம் பங்களிப்பை ஓசையின்றி ஆழமாக அளித்துள்ளன.