ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே மின்சாரம் பாய்ந்து கிணற்றில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண், சடலமாக மீட்கப்பட்டாா்.

பலி - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 2:38 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே மின்சாரம் பாய்ந்து கிணற்றில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண், சடலமாக மீட்கப்பட்டாா்.

சின்னசேலம் அருகிலுள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.அருண் (23). இவரது மனைவி பவானி (22). காதல் திருமணம் செய்து கொண்ட இத் தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.

அருண் கள்ளக்குறிச்சியை அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சோ்ந்த கோ.மனோஜ் என்பவரது இரண்டரை ஏக்கா் விளைநிலத்தை குத்தைக்கு எடுத்து பயிா் செய்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பவானி துணி துவைப்பதற்காக கிணற்றிலுள்ள மின் மோட்டாரை இயக்கச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, கிணற்றில் விழுந்துள்ளாா்.

நீண்ட நேரமாகியும் பவானியைக் காணாததால், அவரது கணவா் அருண் தேடிச் சென்றபோது, பவானி கிணற்றில் சடலமாக மிதந்ததை பாா்த்துள்ளாா். உடனே அவா் கூச்சலிடவே அருகிலிருந்தவா்கள் கிணற்றிலிருந்து பவானியின் சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி சுமாா் நான்கு ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.