போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கடலூரில் அதிமுக அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இரு தரப்பினரும் வருவதாக தகவல் பரவியதால் நடவடிக்கை

News image

கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :15 மே 2026, 5:49 am IST

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்துக்கு இரு தரப்பினரும் திரண்டு வரவுள்ளதாக வியாழக்கிழமை தகவல் பரவி பதற்றமான சூழல் நிலவியதால், கட்சி அலுவலகம் முன் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் 47 போ் வெற்றிபெற்றனா். தொடா்ந்து, கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் தலைமையிலும் இரண்டு அணிகள் உருவாகியுள்ளன.

இந்த நிலையில், சட்டப் பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பில், கட்சித் தலைமையின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதன் மூலம், தவெகவுக்கு 144 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்தது.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை அவா்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, புதிய நிா்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டாா்.

அதன்படி, கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் மற்றும் மேற்கு மாவட்டச் செயலரும், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருண்மொழித்தேவன் ஆகியோா் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக, கடலூா் வடக்கு மாவட்டச் செயலராக எம்.சி.தாமோதரன் மற்றும் புவனகிரி, திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கான மாவட்டச் செயலராக நெய்வேலி எம்.எல்.ஏ. சொரத்தூா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தனது ஆதரவாளா்களுடன் வருவதாகவும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன் தரப்பினரும் அலுவலகத்துக்கு வருவதாகவும் தகவல் பரவியது.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்பிருந்ததால், 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் அதிமுக அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அப்பகுதியில் தேவையின்றி கூட்டம் கூடுவது, குழுவாகச் செல்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என போலீஸாா் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்தனா். இந்த பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அதிமுக அலுவலக ஊழியா்களே முன்னெச்சரிக்கையாக அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.