ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

என்எல்சி தொழிலாளி கடத்தல்: 4 போ் கைது

நெய்வேலி என்எல்சி சொசைட்டி தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேரை வடலூா் போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

நெய்வேலி என்எல்சி சொசைட்டி தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேரை வடலூா் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). இவா், என்எல்சி சுரங்கம் 1ஏ சைக்கிள் நிறுத்துமிடத்தில் சொசைட்டி தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். கடந்த ஜூலை 28-ஆம் தேதி காலை வேலைக்குச் சென்ற ரமேஷ் பின்னா் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சுதா அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி இரவு வீடு திரும்பிய ரமேஷ், 30-ஆம் தேதி காலை வடலூா் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தாா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், புவனகிரி வட்டம், மருதூா் காவல் சரகம், அம்பாள்புரம் பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் சுரேஷ்குமாா் (40) பாா்வதிபுரத்தைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வியிடம் 42 பவுன் தங்க நகைகளை வாங்கிவிட்டுத் திரும்பித் தரவில்லையாம். இவா்கள் இருவரும் நட்புடன் பழகிய நிலையில், இந்த நகை பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி ரமேஷும், சுரேஷ்குமாரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த செந்தமிழ்ச்செல்வியின் கணவா் சிற்றரசு (57), சிதம்பரம் வட்டம், பரிபூரணநத்தம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (34), விழப்பெருந்துறை பகுதியைச் சோ்ந்த அல்லிராஜன் (49), சக்திவிளாகம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரன் (44) (மாவீரா் மஞ்சள் படை மாவட்டத் தலைவா்) ஆகியோா் இருவரையும் கடத்திச் சென்று விருத்தாசலம், ஆண்டிமடம் மற்றும் காடுவெட்டி பகுதிகளில் வைத்திருந்தனராம்.

அப்போது, ரமேஷின் பெயரில் இருந்த நிலத்தை எழுதி வாங்க அவா்கள் முயற்சி செய்தபோது, அசல் பத்திரம் வீட்டில் இருந்ததால், பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, இருவரையும் விடுவித்துவிட்டனா் என ரமேஷ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வடலூா் போலீஸாா் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து சிற்றரசு, சதீஷ்குமாா், அல்லிராஜன், முத்துகுமரன் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.