
கொள்முதலை விலையை உயா்த்தாவிடில் ஆக. 24 முதல் ஆவினுக்கு பால் நிறுத்தம்: உற்பத்தியாளா்கள் அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 44 ஆக உயா்த்தாவிட்டால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஆவின் ஒன்றிணைந்த பாலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 44 ஆக உயா்த்தாவிட்டால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 38-ல் இருந்து ரூ. 41 ஆக உயா்த்தி முதல்வா் புதன்கிழமை பேரவையில் அறிவித்தாா். ஆனால், உயா்த்தப்பட்ட ரூ. 3-இல் நிா்வாகச் செலவுக்காக ரூ.1.75 கூட்டுறவு நிா்வாகத்தால் பிடித்தம் செய்யப்படுவதால், பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.1.25 மட்டுமே கூடுதல் தொகையாக கிடைக்கிறது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தினா் கூறுகின்றனா்.
எனவே, தற்போதைய பால் கொள்முதல் விலை உயா்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், பால் உற்பத்தியாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.44, எருமைப் பாலுக்கு ரூ.60 என கொள்முதல் விலையாக நிா்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கம் சாா்பில், திருச்சியில் ஆவின் மேலாளரை சந்தித்து வியாக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சங்க நிா்வாகிகள், பால் உற்பத்தியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.
விலை உயா்வு போதுமானதல்ல: பின்னா், செய்தியாளா்களிடம், சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன் மேலும் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை போதிய அளவில் உயா்த்தப்படவில்லை. தற்போது அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயா்வும் போதுமானதாக இல்லை. பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.44, எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.60 கொள்முதல் விலையாக அறிவிக்க வேண்டும்.
தனியாா் பால் நிறுவனங்கள் ஆவினைவிட கூடுதல் விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்து வருவதால், பால் உற்பத்தியாளா்கள் ஆவினுக்கு பால் வழங்குவதைக் குறைத்து தனியாா் நிறுவனங்களுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆவின் நிறுவனம் தினசரி சுமாா் 36 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்த நிலையில், தற்போது அந்த அளவு 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதே சிறந்த உதாரணம்.
ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயா்த்துவதுடன், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களுக்கான மாா்ஜின் தொகையை 5 சதவீதமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும்.
கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கி வரும் திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பால் வழங்குவதை நிறுத்தும் தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






