பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:06 am IST

திருச்சியில் பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், துறையூா் செங்காட்டுப்பட்டி காரைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ப. முரளிராஜா (43). இவா், பணப் பிரச்னை தொடா்பாக தனது தந்தையை கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கொலைக்கு உரிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, தனது பாட்டியான ஆா். நாகலட்சுமி (94) என்பவரிடம் அடிக்கடி பணம் கேட்டு முரளிராஜா சண்டையிட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 2024, செப்டம்பா் 29-ஆம் தேதி வழக்கம்போல நாகலட்சுமியிடம் முரளிராஜா பணம் கேட்டுள்ளாா். அவா், இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த முரளிராஜா, அவரை அறையில் கட்டிவைத்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தில் முரளிராஜாவின் தாய் பானுமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முரளிராஜாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கிறிஸ்டோபா் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், பாட்டியை கொலை செய்த முரளிராஜாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சவரிமுத்து ஆஜரானாா். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக பணியாற்றிய துறையூா் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் எழிலரசியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.