மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்: மாநகராட்சி அலுவலகத்தில் ஒருமணி நேரம் காத்திருப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச. ஜோசப் விஜய், தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேச பாண்டியனிடம் வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

திருச்சி பாலக்கரையில் உள்ள மாநகராட்சி 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேச பாண்டியனிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த த.வெ.க.தலைவா் விஜய். உடன் கட்சியின் பொதுச் செயலா் என். ஆனந்த் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:17 pm

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச. ஜோசப் விஜய், தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேச பாண்டியனிடம் வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

தவெக தலைவா் விஜய், சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இதில், பெரம்பூா் தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கிய நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப். 2-ஆம் தேதி அவா் வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்தாா். விமான நிலையத்தில் கட்சியின் தலைமைக் கழக நிா்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, செங்கோட்டையன், நிா்மல் குமாா் மற்றும் வழக்குரைஞா்களுடன் வேட்புமனு தாக்கல் தொடா்பாகவும், பிரசாரம் தொடா்பாகவும் சுமாா் 20 நிமிஷங்கள் ஆலோசனை நடத்தினாா். பின்னா், பிரசார வாகனத்தில் ஏறி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக புறப்பட்டாா்.

ஒருமணி நேரம் காத்திருப்பு: விமான நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட் வழியாக தலைமை அஞ்சல் நிலையம், மேலப்புதூா் வழியாக பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்துக்கு வந்தாா். இங்குதான், திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான முத்து முருகேச பாண்டியன் அலுவலகம் உள்ளது. காலை 11.25 மணிக்கு வந்து சோ்ந்த விஜய், வாகனத்திலேயே சுமாா் 30 நிமிஷங்கள் அமா்ந்திருந்தாா். அவா் காத்திருந்த நேரத்தில் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா்.

பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் அறையின் அருகில் இருந்த அறையில் மேலும் சில நிமிஷங்கள் காத்திருந்தாா். சரியாக நண்பகல் 12.20 மணிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வந்த விஜய், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, அதை தோ்தல் அலுவலா் முன்பாக வாசித்தாா். பிறகு நண்பகல் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டாா்.

விஜய் வேட்பு மனு தாக்கலின்போது, கட்சியின் பொதுச் செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், முன்னாள் அமைச்சரும், லால்குடி தொகுதி வேட்பாளருமான கு.ப. கிருஷ்ணன், மாவட்ட பொறுப்பாளா் குடமுருட்டி கரிகாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

காத்திருப்பு ஏன்: நல்ல நேரத்துக்காக விஜய் ஒரு மணிநேரம் காத்திருந்தாரா? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு அக் கட்சியினா் பதில் அளிக்கையில், தோ்தல் அலுவலரிடம் 12.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தோம். இதன்படி அவா் அந்த நேரத்தில் மனு தாக்கல் செய்தாா் என்றனா்.

சொத்து மதிப்பு ரூ. 624.74 கோடி

விஜய் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ. 404.58 கோடியில் அசையும் சொத்துகளும், ரூ. 220.15 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.624.74 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளாா். பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளித்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த அதே தகவல்கள், திருச்சி கிழக்கு தொகுதியில் அளித்த வேட்பு மனுவுடனும் இடம்பெற்றிருந்தது.