அரவானிகளின் 'முஹர்ரம் ஜமாத்' விழா
திருச்சி, ஜன. 2: வித்தியாசமான வாழ்வியல் முறைகளைக் கொண்டுள்ள அரவானிகள் சமூகத்தில் மறைந்த- மூத்த அரவானிகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக நடத்தும் 'முஹர்ரம் ஜமாத்' என்னும் விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழம


திருச்சி, ஜன. 2: வித்தியாசமான வாழ்வியல் முறைகளைக் கொண்டுள்ள அரவானிகள் சமூகத்தில் மறைந்த- மூத்த அரவானிகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக நடத்தும் 'முஹர்ரம் ஜமாத்' என்னும் விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனிதகுலத்தில் ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் இடையே 'இடையினமாக' வாழ்ந்து வரும் அரவானிகள் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் முற்றிலும் வித்தியாசமானவை.
குடும்பமாக வாழ்வதிலிருந்து தொடங்கி, மாவட்டங்களின் தலைமை அமைப்பாக 'ஜமாத்' நடத்துவது, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 'பால் ஊற்றும் விழா' என எல்லாமும் வித்தியாசமாக- அதே நேரத்தில் தொன்றுதொட்டு விடாமல் கடைப்பிடித்தும் வருகின்றனர் என்பது முக்கியமானது.
இவர்களின் மொழி ('கெüடி பாஷை' என்கின்றனர்!), நடவடிக்கை, சடங்குகள் அத்தனையிலும் முஸ்லிம் மத அடையாளம் கொஞ்சம் இருக்கிறது.
இவ்வாறான வாழ்வியல் சடங்குகளில் ஒன்றான 'முஹர்ரம் ஜமாத்' விழாதான், திருச்சி செங்குளம் காலனியிலுள்ள கஸ்தூரி நாயக் (மாவட்ட அளவிலான ஜமாத் அமைப்பின் தலைவியின் பெயருடன் 'நாயக்' இணைந்திருக்கும்!) வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் அரவானிகள் சமூகத்தின் மூத்தவர்களாக வாழ்ந்து மறைந்த தாவூத் இப்ராஹிம் சாஹிப், ஜானம்மாள், குர்ஷித், கோபியம்மாள் ஆகியோரின் நினைவாகத்தான் இந்த விழா.
மறைந்த மூத்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு, கூடவே- அரவானிகளின் குல தெய்வமாக வழிபடப்படும் போத்திராஜ் மாதா, முஸ்லிம் மதப் புனித தலமாக கருதப்படும் மும்பை பாவா ஹாஜ் அவுலியா தர்கா ஆகியவற்றின் படங்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. படையலில் லோபால் என்ற இனிப்பு- பட்டானி கலவை, பேரீச்சம்பழம், பூந்தி ஆகியவற்றுடன் முட்டை- குஸ்கா வைக்கப்பட்டது.
படங்களுக்கு முன்பு குத்துக்காலிட்டு அமர்ந்த அரவானி ஹீனா, 'பாத்தியா' ஓதினார். மறைந்த அரவானிகளின் பெயரைச் சொல்லி அவர்களின் ஆத்மா சாந்தியடைய தொழுகை நடத்தினார் அவர். அதன்பிறகு, கஸ்தூரி நாயக் வீடு முழுவதும் சந்தனத்தைக் கொண்டு ஐந்து விரல்களையும் விரித்தவாறு அச்சு வைத்தார்.
தெருக்களில் ஆடிப்பாடி காசு சேர்க்கும் அரவானிகளின் தொழில் முறையை அடையாளப்படுத்தும் 'டோலக்கு' சந்தனம் பூசி சிறப்பு செய்யப்படுகிறது.
விழாவுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் கழுத்தில் சந்தனத்தைப் பூசினார் கஸ்தூரியம்மாள். கைகளில் உள்ளங்கையின் மேட்டுப் பகுதியிலும், புறங்கையிலும் மருதாணி பூசினார். இதைத் தொடர்ந்து வந்திருந்த அரவானிகளின் நடனமும் நடைபெற்றது. விருந்துடன் முடிந்தது 'முஹர்ரம் ஜமாத்'.
இந்த விழாவில், திருச்சியைச் சேர்ந்த 'சேஃப்' அமைப்பின் தலைவி பி. கஜோல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
'ஆண்டுதோறும் முஹர்ரம் மாதத்தில் இந்த விழாவை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். வசதிக்கேற்ப கறி விருந்தும் இடம் பெறும். விழாவில் அரவானிகள் மட்டுமல்லாது, நாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பங்கேற்பது எங்களுக்கு பெருமையைத் தருகிறது' என்கிறார் கஸ்தூரியம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...