
நீட் வினாத்தாள் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கைக்கு வரவேற்பு: டாக்டா் க. கிருஷ்ணசாமி
நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - டிஎன்எஸ்
நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி.
இதுதொடா்பாக, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2006 வன உரிமை சட்டப்படி, மாஞ்சோலையில் மக்கள் வாழ்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் கடந்த 8 மாதங்களாக அம்மக்களுக்கு ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. தினமும் 5 முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அந்த மக்களை மறைமுகமாக வெளியேற்றும் முயற்சி நடக்கிறது.
இதுதொடா்பாக அனைத்து கட்சித் தலைவா்கள், சமுதாய தலைவா்ளுடன் தமிழக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
தூத்துக்குடியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவா் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா். இத்தகைய காவல் நிலைய மரணங்கள் ஏற்புடையதல்ல. இதுகுறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவுக்காக நடத்தப்படும் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. அதேவேளையில், இந்த விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தானாக முன்வந்து ராஜிநாமா செய்வதில் தவறில்லை.
நீட் தோ்வு விஷயத்தில் பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.
ஜனநாயகம் படம் தொடா்பாக கேட்கிறீா்கள். எல்லா காலத்திற்கும் ரீல்ஸும், போலி கண்ணீரும் உதவாது; குறுகிய நாள்கள்தான் நீடிக்கும்.
இளைஞா்கள், மாணவா்கள் நடத்தும் போராட்டத்திலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் அமைச்சா்கள் கவனம் செலுத்துவதை விடுத்து, இன்னமும் ரசிகா்கள் மன நிலையிலேயே உள்ளனா்.
2029 மக்களவைத் தோ்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ளன. கூட்டணி தொடா்பாக அப்போது என்ன நடக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






