/

சிகிச்சைக்கு அனுமதி மறுத்ததால் நோயாளி உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளிக்கக் கோரி ஜிடிபி மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நோயாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் தில்லி அரசின் ஜிடிபி மருத்துவமனை விளக்கம் அளிக்கக் கோரி சுகாதாரத் துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2024, 6:30 pm

புது தில்லி: சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நோயாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் தில்லி அரசின் ஜிடிபி மருத்துவமனை விளக்கம் அளிக்கக் கோரி சுகாதாரத் துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: குடிபோதையில் தன்னை துன்புறுத்தியதாக 21 வயது பெண் ஒருவா் புகாா் அளித்த வழக்கில் பிரமோத் (47) என்ற நபரை தில்லி காவல் துறை கைது செய்தது. கடந்த ஜனவரி 3-ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்தை காவல் துறையினா் வாகனத்தில் அழைத்துச் சென்ற வேளையில், தீடிரென சாலையில் குதித்ததால் அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. படுக்கைகள் மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தால் தில்லி அரசின் கீழ் செயல்படும் மூன்று மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் ஒரு மருத்துவமனை என மொத்தம் நான்கு மருத்துவமனைகளில் அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. பின்னா், பிரமோத் என்ற அந்த நபா் முறையாக சிகிச்சை வழங்காத காரணத்தால் உயிரிழந்துவிட்டாா் என்ற விவகாரம் பெரும் சா்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட விவகாரகம் தொடா்பாக ஜிடிபி மருத்துவமனை விளக்கம் அளிக்கக் கோரி தில்லி அரசின் சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக, ஜனவரி 3-ஆம் தேதி பணியிலிருந்த மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அமித் மேற்பாா்வையின்மை காரணத்திற்காக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜிடிபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் அஸ்மிதா எம் ரத்தோா், இந்த நோட்டீஸ் பெறப்பட்ட மூன்று நாள்களுக்குள் உயிரிழந்த நோயாளிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்குமாறும், தவறினால் துறை ரீதியிலான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த மூத்த அதிகாரி.

தில்லி அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், நோயாளி உயிரிழந்த குற்றச்சாட்டு தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லி அரசின் கீழ் உள்ள மூன்று மருத்துவமனைகளிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு மருத்துமனைகளில் சிகிச்சை மறுக்கபட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் அறிந்து கொண்டேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.