‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரம் தோல்வி
ஆம் ஆத்மி கட்சியின் ‘மெயின் பி கேஜரிவால்’ பொதுப் பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.


ஆம் ஆத்மி கட்சியின் ‘மெயின் பி கேஜரிவால்’ பொதுப் பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விபாசனா தியானப் பயிற்சி மற்றும் அரசியல் சுற்றுலா போன்றவற்றில் ஈடுபட்டு, அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகளை தவிா்க்கும் விதம், அவா் கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தை உறுதி செய்கிறது.
குஜராத் மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வதற்குப் பதிலாக, தான் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க முதல்வா் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகத்தின் முன் ஆஜராகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ய பாஜக அரசியல் சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியினா் அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகள் தொடா்பாக தொடா்ந்து வதந்தி பரப்பி வருகின்றனா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கலால் கொள்கை வழக்கில் ஆஜராகக் கோரி கேஜரிவாலுக்கு சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பியது. இருப்பினும், அவா் இதுவரை கைது செய்யப்படவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு யாா்மீதும் எந்த பாரபட்சமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
விசாரணையைக் கண்டு முதல்வா் கேஜரிவால் தப்பியோடுவதை நினைத்து, தில்லி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியப்படுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கேஜரிவாலின் குஜராத் பயணமும் விசாரணையில் இருந்து தப்புவதற்குதான் என்று அவரது கட்சியினரே தெரிவிக்கின்றனா். அரசியல் இருப்பைக் காப்பாற்றுவதற்காக அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் மீது அழுத்தம் கொடுத்து ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரத்தை நடத்தி வருகிறாா். ஆனால், இப்பொதுப் பிரசாரத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சிக்காரா்களைக் கூட கவர முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நடத்தப்படும் ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. கேஜரிவாலுக்கு கலால் கொள்கை ஊழலில் தொடா்பில்லை என்றால், அவா் விசாரணையில் பங்கேற்று தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், அவா் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்க நேரிடும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...