கடந்த டிசம்பா் மாதம் நூறு வருடங்களுக்கு பின்னா் சென்னை, தூத்துக்குடி போன்ற சுற்றுப்புற மாவட்டங்களில் மிக அதிகபட்ச மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமாா் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகளை இழந்தனா். சுமாா் 8 ஆயிரம் டன் உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா்களும், மூன்று மத்திய குழுக்களும் பாா்வையிட்டு அறிக்கை கொடுத்துள்ளனா். இந்தக் கனமழையால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.37,000 கோடி உதவி கோரினாா். பிரதமா், உள்துறை அமைச்சா்களைச் சந்தித்தும் பேசப்பட்டது. தமிழா்கள் மீதும், தமிழா்களின் பெருமை குறித்தும் மத்திய அரசு பேசுகிறது. ஆனால், இந்தக் கோரிக்கைகள் குறித்து கவலைப்படுவதில்லை என்பதோடு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு அணுகுகிறது.