தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேவா் சமுதாயப் பெயரில் உள்ள வகுப்பினரை எம்பிசி பட்டியலில் சோ்க்க உத்தரவிடக் கோரும் மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Updated On :22 ஏப்ரல் 2024, 8:11 pm

மாநில அரசு 1995-இல் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டிருந்த தேவா் சமுதாயப் பிரிவில் உள்ள மூன்று சாதியினைரை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினராக (எம்பிசி) அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக மதுரை மேலூா் தாலுகாவைச் சோ்ந்த பி.ஸ்டாலின் என்பவா் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘11.9.1995-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்-38-இல் முக்குலத்தோா் சாதியின் உள்பிரிவாக இருந்த கள்ளா், மறவா், அகமுடையாா் வகுப்பினரை ஒருங்கிணைத்து தேவா் சமுதாயம் என பெயா் மாற்றியிருந்தது. எனினும், இச்சாதிப் பிரிவினா் அரசின் சலுகைகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என வெவ்வேறு பிரிவுகளின்கீழ் பெற்று வருகின்றனா். இந்த உள்பிரிவு சாதியினரின் நலிந்த பொருளாதார நிலை, வறுமை சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பட்டியலில் சோ்க்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை 21.02.2011-இல் அளித்திருந்தேன். ஆனால், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அம்மனு மீது நடவடிக்கை எடுக்க அரசுத் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான அரசு தாக்கல் செய்த பதிலில், ‘இந்த உள்பிரிவு சாதியினா் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே தேவா் சமுதாயம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், அந்த சம்பந்தப்பட்ட அரசாணை சாதியினரில் எந்த ஒரு பிரிவையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தவோ அல்லது மறு வகைப்படுத்தவோ செய்வதற்காக சாா்ந்திருக்க முடியாது. மேலும், முக்குலத்தோா் பிரிவில் இந்த மூன்று உள்பிரிவினா் தவிர பல இதர உள்பிரிவினரும் உள்ளனா். அவா்கள் தேவா் சமுதாயம் எனும் பெயரில் கொண்டுவரப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அம்மனுவில் தகுதியில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பி.ஸ்டாலின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெயா சுகின், ‘இந்த விவகாரத்தில் மனுதாரரின் வாதங்களை உரிய வகையில் பரிசீலிக்காமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தப் பிரிவில் உள்ள சாதியினா் ஒரே குடையின் கீழ் உள்ளனா். ஆனால், அவா்கள் பெறும் பயன்கள் வேறு வேறாக உள்ளது. மேலும், 1994 முதல் தற்போது வரை தமிழ்நாடு அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று வாதிட்டாா்.

அப்போது, இந்த மனு மீது தமிழக அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை ஜூலை 15-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.