தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவ அறிவிப்பு வெளியீடு
தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.


தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
நாட்டில் மஞ்சள் உற்பத்தி அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்பட்டு, வரும் 2030}ஆம் ஆண்டுக்குள் ரூ.8,300 கோடி மதிப்புள்ள மஞ்சள் ஏற்றுமதி எட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மஞ்சள் விவசாயிகளின் தேவைகள், எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதையொட்டி, மத்திய வர்த்தகத் துறை இது தொடர்பான முறையான அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது.
அதே சமயத்தில் இந்த வாரியம் அமைக்கப்பட்டதற்கு அரசிதழில் அறிவிக்கை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதுடன், வாரியம் 'அமைவிடம்' குறித்த அறிவிப்பும் மத்திய வர்த்தகம் அமைச்சக அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
உற்பத்தி அபிவிருத்தியில் கூடுதல் கவனம்: தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பது:
மஞ்சள் வாரியத்துக்கான தலைவரை விரைவில் மத்திய அரசு நியமிக்கும். இதன் உறுப்பினர்களாக ஆயுஷ் அமைச்சகம், மருந்துத் துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, வர்த்தம் மற்றும் தொழில்துறை போன்றவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
மேலும், சுழற்சி அடிப்படையில் மஞ்சள் அதிகம் விளையும் மாநிலங்களைச் சேர்ந்த மூன்று மாநில அரசு பிரதிநிதிகள், மஞ்சள் ஆய்வாளர், மஞ்சள் விவசாயி, ஏற்றுமதியாளர் போன்ற பிரிவுகளில் தலா ஒரு பிரதிநிதியும் உறுப்பினர்களாக இடம்பெறுவர். வாரியத்தின் செயலரை மத்திய வர்த்தகத் துறை நியமிக்க உள்ளது.
பணிகள் என்ன?: மஞ்சள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நுகர்வை அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்க சர்வதேச அளவில் புதிய சந்தைகளை உருவாக்கவும் வாரியம் முயற்சிக்கும்.
மேலும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிகளில், புதிய தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், மதிப்புக் கூட்டப்பட்ட மஞ்சள் தயாரிப்புகளுக்கான நமது பாரம்பரிய அறிவை மேம்படுத்தும் பணிகளிலும் வாரியம் ஈடுபடும்.
தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் அதிக உற்பத்தி: நாட்டில் 2022-23-இல் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன்
(உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75 சதவீதத்திற்கு மேல்) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்வதுடன், அதிக அளவில் நுகர்வையும் கொண்டுள்ளன.
சர்வதேச அளவில் முதலிடம்: மஞ்சள் ஏற்றுமதியிலும் இந்தியா சர்வதேச அளவில் முதலிடம் வகிக்கிறது. உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 62 சதவீதமாகும். 2022-23-இல் ரூ.1,722 கோடி மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், எதிர்காலத்தில் வாரியத்தின் தொடர் நடவடிக்கைகளால், 2030}ஆம் ஆண்டில் மஞ்சள் ஏற்றுமதி ரூ. 8,300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...