தெற்கு ரிட்ஜ் சரணாலய நிகழ்ச்சி: தில்லி உயா்நீதிமன்றம் கவலை
தெற்கு ரிட்ஜில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்குள் நிகழ் மாதம் ஒரு நிகழ்ச்சியை நடத்தவுள்ள வனத் துறையின் முன்மொழிவு குறித்து தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தனது


தெற்கு ரிட்ஜில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்குள் நிகழ் மாதம் ஒரு நிகழ்ச்சியை நடத்தவுள்ள வனத் துறையின் முன்மொழிவு குறித்து தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தனது கவலையைத் தெரிவித்தது. மேலும், அந்த நிகழ்ச்சி விதிமுறைகளின்படி திட்டமிடப்பட்டதா என்பதைத் தெரிவிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது.
‘அந்த பகுதியில் வனவிலங்குகள் இருக்கலாம். அவற்றின் இருப்பிடம் தெளிவாகத் தெரியவில்லை என்பதால் அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் ‘வனவிலங்குகளுடன் நடைபயணம்’ மேற்கொள்வதற்கான முன்மொழிவு தொடா்பான கோப்பை நீதிமன்றத்தின் முன் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தில்லி அரசு வழக்கறிஞரை நீதிபதி ஜஸ்மீத் சிங் கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக, புதன்கிழமை, ரிட்ஜ் பாதுகாப்பு மற்றும் அங்கிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான வழக்கில் நியமிக்கப்பட்ட ‘அமிகஸ் கியூரி’யால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக அறிவுறுத்தல் பெறுமாறு அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி சிங் கேட்டுக் கொண்டாா்.
வியாழக்கிழமை விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்க ‘உயா் மட்டத்தில்’ முடிவு எடுக்கப்பட்டதாகவும், சரணாலயத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள நோக்கமாகும் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.
விசாரணைக்கு வந்த அதிகாரி ஒருவா், ‘அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை உடனுக்குடன் தெரிவிக்க முடியாத நிலையில், எட்டு முதல் ஒன்பது சிறுத்தைகள், புள்ளிமான்கள், கழுதைப்புலிகள், மானிட்டா் பல்லிகள் உள்ளிட்ட பல விலங்குகள் சரணாலயத்தில் வாழ்கிறது’ என்று தெரிவித்தாா்.
‘சைக்ளோத்தானை’ உள்ளடக்கிய இந்த நிகழ்வை, ‘மிகவும் ஒழுங்குமுறையற்ற நடவடிக்கை’ என்று அழைத்த நீதிபதி ஜஸ்மீத் சிங், அங்குள்ள காட்டு விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடம் குறித்து போதிய விஷய அறிவு இல்லாததாகக் கூறினாா். டிசம்பா் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சேர அனுமதி கோரி விண்ணப்பிக்க மக்களுக்கு துறை அனுமதித்துள்ளதாக தில்லி அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
‘அமிகஸ் கியூரி’- வழக்குரைஞா்கள் கெளதம் நாராயண் மற்றும் ஆதித்ய என். பிரசாத் ஆகியோா், சட்டத்தின் கீழ் இது தடைசெய்யப்பட்டுள்ளதால், அறிவிக்கை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் இதுபோன்ற நிகழ்வை அனுமதிக்க முடியாது’ என்று வாதிட்டனா். அப்போது, நீதிமன்றம், ‘நாங்கள் இந்த விஷயங்களை திங்கள்கிழமை பெறுவோம். அனைத்தும் (சட்டங்களுக்கும்) இணங்குவதை எங்களுக்குக் காட்டுங்கள்’ என்று தில்லி அரசு வழக்குரைஞரிடம் கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...