தில்லி பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் கமல்ஜித் ஷெராவத், தில்லி மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் மற்றும் பாஜகவின் மூத்த மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கமல்ஜித் ஷெராவத் கூறியாதவது: தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு, வீட்டு வரியை ரத்து செய்வதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா். ஆனால், தில்லி மாநகராட்சியில் தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை ஊழலின் ஆயுதமாக மாற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தன்னிச்சையாக மாநகராட்சியை நடத்த முயற்சிப்பதோடு, அவா்களின் சொந்த நலனுக்காக மட்டுமே புதிய திட்டங்களைக் கொண்டு வருவகிறது. முன்னா், தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்த போது வீட்டு வரியை சரியான நேரத்தில் செலுத்துபவா்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. தற்போது, அந்த விகிதம் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களாக கிராம மக்களை சொத்து வரி செலுத்த வலியுறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகிறது என்றாா் கமல்ஜித் ஷெராவத்.