தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போலீஸ் காவலில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

மானாமதுரையில் போலீஸாா் தாக்கியதில் இளைஞா் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை சிபிசிஐடி போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

News image

இளைஞா் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்பேரில், சிசிடிவி காட்சிகளைப் பாா்வையிட்டு பாதுகாக்க மானாமதுரை காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, நகராட்சி ஆணையா் கோபால கிருஷ்ணன். உடன் கோட்டாட்சியா் ஜெபி கிரேஸியா.

Updated On :10 மார்ச் 2026, 9:41 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாா் தாக்கியதில் இளைஞா் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை சிபிசிஐடி போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். மேலும், சிசிடிவி காட்சிகள் பாதுகாப்புக் குழுவினா் காவல் நிலையத்தில் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

மானாமதுரை சியோன் நகரில் தொழிலாளிகள் ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா் ஆகாஷ் டெலிசனை (26) மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை பாலம் அருகே போலீஸாா் பிடிக்கச் சென்றனா். அப்போது, ஆகாஷ் டெலிசன் தப்பிச் செல்ல முயன்றதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிவகங்கை சிபிசிஐடி காவல் ஆய்வாளா் கீதா, மதுரை ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மானாமதுரை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினா். அங்கிருந்த போலீஸாரிடம் விசாரணை நடத்திய பிறகு, ஆகாஷ் டெலிசன் தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படும் மேலப்பசலை பாலம் பகுதிக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு சம்பவம் தொடா்பான மனு மீதான விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளைப் பாதுகாப்பது தொடா்பாக சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா், நகராட்சி ஆணையா் ஆகியோா் அடங்கிய குழுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நியமித்தது.

இதன்படி, மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, மானாமதுரை நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மானாமதுரை காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து சிசிடிவி காட்சிகளைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்து பதிவுக் காட்சிகளைப் பாதுகாத்தனா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத், கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.