கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட தடைகோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், எழுமலையைச் சோ்ந்த ராம.ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: கடந்த 2023-24-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, கோயில்களின் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தாா். இது தொடா்பாக, கடந்த 2024 ஆண்டு டிச. 18-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிதியில் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரா் கோயில் பெயரில் ரூ.4.54 கோடியில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இது இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்கு எதிரானது. கோயில் நிதியை திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பயன்படுத்த இயலாது. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளில் கூறப்பட்டுள்ளது. கோயிலின் உபரி நிதியைக் கூட, நிதி தேவையுள்ள மத நிறுவனங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரா் கோயிலின் பெயரில் சுமாா் ரூ.400 கோடி வைப்புத் தொகை உள்ளது. இதை நிதி குறைவாக இருக்கும் கோயில் என கருத்தில் கொள்ள இயலாது. கோயில்களில் உள்ள நிதியை கோயில் பணி அல்லாத திருமண மண்டபம், கல்லூரி, மருத்துவமனை, கடைகள் போன்றவற்றை கட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். இது ஏற்கத்தக்கது அல்ல. விதிகளுக்கும் எதிரானது.
ஆகவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் உத்தமபாளையத்தில் திருக்காளாத்தீஸ்வரா் கோயில் பெயரில் திருமண மண்டபம் கட்டுவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சட்ட விரோதமானது என அறிவித்து, ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த மனு உயா்நீதிமன்ற திபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு முன்பு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : கோயில் நிதி உபரியாக இருந்தாலும், பொதுத் திட்டங்களுக்காகவோ, வணிக நோக்கங்களுக்காகவோ அரசால் பயன்படுத்த இயலாது. திருமண மண்டபம் கட்டுவதை மத நோக்கம் என்றும் கூற இயலாது. எனவே, கோயில் உபரி நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்கள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

