
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி மண் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளங்களில் விதிகளை மீறி மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

பழனி அருகே அய்யம்புள்ளி கோதையம்மன் குளத்தில் விதிகளை மீறி மண் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரங்கள்.
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளங்களில் விதிகளை மீறி மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.
தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறுவதற்காக பட்டியலில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 75 சதவீத குளங்களில் வண்டல் மண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் பட்டாக்களை பயன்படுத்தி வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்றுக் கொண்டு குளங்களில் சரளை மண், செம்மண் ஆகியவை அள்ளப்படுகின்றன. இவை செங்கல் சூளைகளுக்கும், கட்டுமானத்துக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், பழனி பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான அய்யம்புள்ளி அருகே பல நூறு ஏக்கா் பரப்பளவு கொண்ட கோதையம்மன்குளத்தில் வலசை காலங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மரங்களில் தங்கி இனப் பெருக்கம் செய்கின்றன. இந்த குளத்தில் டிராக்டரில் மண் அள்ளுவதற்குப் பதிலாக கடந்த சில நாள்களாக பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்கள் மூலம் தோண்டப்பட்டு நூற்றுக்கணக்கான டிப்பா் லாரிகளில் வணிக பயன்பாட்டுக்கு மண் அள்ளப்படுகிறது. தற்போது பாதி குளத்துக்கு மேல் மண் தோண்டப்பட்டு எடுக்கப்பட்டு விட்டது.
எனவே இதைத் தடுக்க வருவாய்த் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






