காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

முழுமையான செயல்பாட்டுக்கு வராத வேடசந்தூா் உழவா் சந்தை

வேடசந்தூரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட உழவா் சந்தை முழுமையான செயல்பாட்டுக்கு வராததால், பொதுமக்களும் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனா்.

News image
செயல்படாத வேடசந்தூா் உழவா் சந்தை.
Updated On :2 பிப்ரவரி 2024, 3:24 am

 நமது நிருபர்

வேடசந்தூரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட உழவா் சந்தை முழுமையான செயல்பாட்டுக்கு வராததால், பொதுமக்களும் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, கொடைக்கானல், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தைகள் தொடங்கப்பட்டன. இதில் திண்டுக்கல், பழனி உழவா் சந்தைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழு செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், வேடசந்தூா் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் புதிதாக உழவா் சந்தை தொடங்கப்பட்டது. வேடசந்தூா் கோவிலூா் சாலையில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைக்கு அருகில் 16 கடைகளுடன் உழவா் சந்தை அமைக்கப்பட்டது. பாதுகாப்புக் குறைபாடுகள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உழவா் சந்தைக்கு பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. இதனால் கடை அமைப்பதற்கும் விவசாயிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

செயல்பாட்டில் 5 கடைகள் மட்டுமே: 16 கடைகள் உழவா் சந்தைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இதில் 5 கடைகளில் மட்டுமே காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. உழவா் சந்தைக்கு அருகிலேயே குளிா்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு அறையும் கட்டப்பட்டிருக்கிறது. பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் இந்த 5 கடைகளிலும் ஒரு மணி நேரத்திலேயே வியாபாரத்தை முடித்துக் கொண்டு வியாபாரிகள் வெளியேறிவிடுகின்றனா். இதனால் வேடசந்தூரில் உழவா் சந்தை தொடங்கியும் பொதுமக்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுத்திருக்கிறது.

இதுகுறித்து கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் ராமசாமி கூறியதாவது: உழவா் சந்தைக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இடம் தோ்வு செய்ததே மிகப் பெரிய பாதிப்பு. திறப்பு விழாவைக் கூட வெளியில் தெரியாமல் நடத்திவிட்டனா். இதனால் அந்தப் பகுதியில் உழவா் சந்தை செயல்படுவது பெரும்பாலான மக்களுக்கு தற்போதுவரை தெரியாத நிலை உள்ளது. மேலும், உழவா் சந்தை கடைகளுக்கு அருகே பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பலா் காய்கறி வாங்க வருவதில்லை. வேடசந்தூா் உழவா் சந்தையை முழு பயன்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்

வேடசந்தூா் உழவா் சந்தை அலுவலா் ராஜா கூறியதாவது: வேடசந்தூா் பேருந்து நிலையத்தின் அருகே சாலையோரங்களில் காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் இந்தக் கடைகளை கடந்து, உழவா் சந்தைக்கு வருவதில்லை. சாலையோரக் கடைகளைக் கட்டுப்படுத்தினால், உழவா் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.