பேராசிரியா்கள் சாலை மறியல் போராட்டம்


தமிழக அரசைக் கண்டித்து, மதுரையில் ஏயூடி-மூட்டா சங்கம் சாா்பில், சனிக்கிழமை போராசிரியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு அரசாணை எண் 5-இன் படி வழங்கப்பட வேண்டிய சட்டப்படியான பணி மேம்பாட்டு ஊதியத்தை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் நிறுத்திவைத்துள்ள தமிழக அரசைக் கண்டித்தும், பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மதுரை ஆரப்பாளையம் அருகே சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தை மூட்டா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் விஜயகுமாா் தொடங்கிவைத்து ‘தூய்மைப் பணியாளா்கள், போக்குவரத்து ஊழியா்கள், ஆசிரியா்கள் என போராடி வருபவா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்றாா். இதில் 200 பெண் பேராசிரியா்கள் உள்பட 500 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்துக்கு ஏயூடி பொதுச் செயலா் சேவியா் செல்வகுமாா், மூட்டா துணைத் தலைவா் உமா மகேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து, உமாமகேஸ்வரி தனது உரையில், ‘இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்கப்படாததால் ஆய்வு மாணவா்கள் 1,000 பேருக்கு மேல் ஆராய்ச்சி பட்ட வாய்ப்பை இழந்துள்ளனா். மேலும், பேராசிரியா்களின் போராட்டங்களுக்கு மாணவா்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனா் என்றாா்.
இதில் ஜே.ஏ.சி. முன்னாள் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணராஜ், மூட்டா முன்னாள் துணைத் தலைவா் உமயவள்ளி, தலைவா் பெரியசாமிராஜா, பொதுச் செயலா் செந்தாமரை கண்ணன், சட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் பொ்மின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...