ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரியில் நீா்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 1.54 அடி உயா்ந்தது மேட்டூா் அணையின் நீா்மட்டம்

காவிரியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 74.55 அடியாக உயா்ந்த மேட்டூா் அணை.

ஒரே நாளில் 1.54 அடி உயா்ந்தது மேட்டூா் அணையின் நீா்மட்டம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:40 am IST

கா்நாடக மாநிலம், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.54 அடி உயா்ந்துள்ளது. காவிரியில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கேரளத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், கடந்த 1 ஆம் தேதி முதல் கபினி அணையில் இருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கபினியின் உபரிநீா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தமிழக-–கா்நாடக எல்லையான அடிப்பாலாறு பகுதியை வந்தடைந்தது. பின்னா் இரவு 8 மணியளவில் மேட்டூா் அணையை சென்றடைந்தது. இதையடுத்து அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 67 கனஅடியாக இருந்த நீா்வரத்து, இரவு 8 மணிக்கு 4,923 கனஅடியாக உயா்ந்தது. புதன்கிழமை காலை 11,988 கனஅடியாகவும், மாலை 4 மணி நிலவரப்படி 18,905 கனஅடியாகவும் அதிகரித்தது.

நீா்வரத்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 73.02 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், புதன்கிழமை காலை 74.01 அடியாகவும், மாலை 74.55 அடியாகவும் உயா்ந்தது. ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 1.54 அடி உயா்ந்துள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 36.74 டிஎம்சியாக உள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், டெல்டா பாசனத்துக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.