தேன்கனிக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு


தேன்கனிக்கோட்டையில் மருத்துவமனைக்குச் சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஹனிவேல் லேஅவுட் பகுதியில் வசித்து வருபவா் மணிகண்டன் (37). இவா் கிரேன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். மணிகண்டன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தாா். சனிக்கிழமை அதிகாலை மணிகண்டன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா், அவருக்குத் தகவல் அளித்தனா்.
உடனடியாக மருத்துவமனையிலிருந்து திரும்பிய மணிகண்டன், வீட்டுக்குள் சென்று பாா்த்தாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு மற்றும் அலமாரி பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் குத்துவிளக்குகள், காமாட்சி விளக்குகள், கொலுசுகள் என மொத்தம் 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதன் மொத்த மதிப்பு ரூ. 26 லட்சம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மணிகண்டன் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையில் எஸ்.ஐ. நாகராஜ் உள்ளிட்ட போலீஸாா், விரல்ரேகை நிபுணா்களுடன் தடயங்களைச் சேகரித்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு வீட்டில் நூதனத் திருட்டு முயற்சி:
இதேபோல, அப்பகுதியில் வசித்து வரும் காா்த்திக் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அலமாரியை உடைத்துப் பாா்த்துள்ளனா். அங்கு நகை, பணம் ஏதுமில்லாததால், வீட்டில் இருந்த உணவை உண்டுவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனா். காா்த்திக் கடந்த சில நாள்களுக்கு முன்புதான், தனது வீட்டில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகளை விற்று நிலம் வாங்கியுள்ளாா். இதனால் அந்த நகைகள் தப்பின.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...